
மது போதையில் சுற்றித்திரிந்த இளைஞர் பேருந்து சக்கரத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்த பதைபதைக்கும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜவ்வாதி ராமராவ் ஆச்சாரி என்ற இளைஞர் திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் தங்கியிருந்து பணியாற்றி வருகிறார். இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் அவிநாசிக்கு பொருட்கள் வாங்கவந்த அந்த இளைஞர் மது அருந்தியுள்ளார். அப்போது அதீத மதுபோதையில் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் சென்ற அவர், தள்ளாடியபடி கூட்டத்தில் நின்றுள்ளார். அப்பொழுது திருப்பூரிலிருந்து செய்யூர் செல்ல இருந்த அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் தவறி விழுந்ததில் வடமாநில இளைஞர் ஜவ்வாதி ராமராவ் ஆச்சாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த அவிநாசி போலீசார் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.