Skip to main content

வாக்கு எண்ணும் மையத்தில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு! - பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்!!

Published on 21/04/2021 | Edited on 21/04/2021

 

vote counting centres chidambaram police and journalist

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூரில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் இங்கு வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதி முழுவதும் மூன்று அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் மற்றும் ஏஜெண்டுகள் தினமும் கண்காணிப்பு அறைக்குச் சென்று காணொளி காட்சி மூலமாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட்டு வருகின்றனர். 

 

அதேபோல், அவ்வப்போது வேட்பாளர்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று (21/04/2021) சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் பாண்டியன், புவனகிரி சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் அருண்மொழித் தேவன் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்தைப் பார்வையிடச் சென்றபோது அவருடன் சிதம்பரம் பத்திரிகையாளர்கள் அனைவரும் புகைப்படம் எடுக்கச் சென்றனர். 

 

vote counting centres chidambaram police and journalist

 

அப்போது பணியில் இருந்த ஏ.டி.எஸ்.பி. சரவணகுமார் பத்திரிகையாளர்களைப் பார்த்து ஒருமையில் திட்டி வெளியேறுங்கள் என மிரட்டியுள்ளார். மேலும், அதிகார தோரணையில் 'வெளியே போ' என ஒருமையில் பேசினார். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ளே சென்றுவர எங்களுக்கு 24 மணி நேரமும் அனுமதி உண்டு என்று கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

 

பத்திரிகையாளர்கள், ஏ.டி.எஸ்.பி. சரவணகுமாரை பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அ.தி.மு.க. வேட்பாளர்கள் கேட்டுகொண்டதற்கு இணங்க போரட்டத்தை முடித்துக் கொண்டனர். ஏ.டி.எஸ்.பி.யின் செயல்பாட்டுக்குப் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களும் அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது, "எங்களுக்கு மாவட்டத் தேர்தல் அலுவலர் என்ன உத்தரவு கொடுத்துள்ளாரோ அதன்படி தான் செயல்படுகிறோம். எனவே, மாவட்டத் தேர்தல் அலுவலரின் அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே பத்திரிகையாளரை உள்ளே அனுமதிக்க முடியும். அனுமதி இல்லாமல் உள்ளே வந்ததால் பத்திரிகையாளர்களை வெளியேற்றினோம். இதில் எங்கள் தவறு ஒன்றும் இல்லை" என்கின்றனர்.

 

அதேபோல் சிதம்பரம் பத்திரிகையாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் ரமேஷ் கூறுகையில், "பத்திரிகையாளர்களுக்கு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு என்று தனி அனுமதி கிடையாது. அனைத்து இடங்களுக்கும் அனுமதி உண்டு. வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ளே என்ன நடைபெறுகிறது என்பதை வெளியில் சொல்வதற்காகத்தான் பத்திரிகையாளர்கள் உள்ளே செல்கிறார்கள். பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்றால் உள்ளே என்ன நடப்பது என்பது மக்களுக்குத் தெரியாது. எனவே தேர்தல் ஆணையம், பத்திரிகையாளரை காவல்துறையினர் தடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்" என்றார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

“சின்னத்தை முடக்க முயற்சிப்பது மோடியின் மோடி மஸ்தான் வேலை” - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister MRK Panneerselvam criticized BJP

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி இந்தியா கூட்டணியின் சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா ஆகியோரை ஆதரித்து சிதம்பரத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இதற்காக சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள லால்புரம் என்ற இடத்தில் பிரம்மாண்ட மேடை மற்றும் பொதுக்கூட்ட பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வியாழக்கிழமை(28.4.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுக்கூட்ட மேடை அமைய உள்ள இடத்திற்கு வந்த அமைச்சர் பன்னீர்செல்வம், மேடை அமைந்துள்ள பகுதி, தொண்டர்கள் அமர உள்ள இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது மேடை அமைக்கும் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சிதம்பரம் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல். திருமாவளவன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர் உள்ளிட்டோரை ஆதரித்து சிதம்பரத்தை அடுத்த புவனகிரி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட லால்புரம் பகுதியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதில் வாக்காளர்கள், பொதுமக்கள், தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். மாநாடு போன்று இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.

முதலமைச்சர் நேரடியாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். 3 ஆண்டு காலத்தில் செய்துள்ள சாதனைகள், பணிகள் குறித்து முதல்வர் பேசி வருகிறார். சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 75 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். முந்தைய தேர்தலில் எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்களைச் சந்தித்து வாக்கு கேட்டு 39 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த ஆட்சியில் தனி நபர்கள் பண பலன்களைப் பெற்றுள்ளனர். ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை நேரடியாகச் செல்கிறது. மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்கள் எந்த உலகத்திலும் இல்லை. பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு உதவித்தொகை என அனைத்து உதவிகளும் நேரடியாக பயனாளிகளுக்குச் செல்கிறது.

திமுக கூட்டணி கொள்கை உள்ள கூட்டணி. இந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. இது 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்கும் சின்னங்களை முடக்குவதன் மூலமாக அவர்களது வெற்றியை தடுக்க முயற்சிக்கின்றனர். இது மோடியின் மோடி மஸ்தான் வேலை. இது எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு செய்கின்ற வேலை. இந்த ஆட்சி இ.டி., சி.பி.ஐ போன்றவற்றை வைத்துக் கொண்டு ஆட்சி புரிகின்றார்கள். ஆனால் தமிழக முதலமைச்சர் மக்கள் நலத்திட்டங்களை செய்து விட்டு, அதை முன்னெடுத்து பிரச்சாரம் செய்து வருகிறார். மக்கள் சக்தியாக ஒன்று திரண்டு வெற்றி பெறச் செய்வார்கள். 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலியை உயர்த்தியது அவரது பயத்தை காட்டுகிறது. இவற்றையெல்லாம் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள். திரண்டு வந்து திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்” எனக் கூறினார்.