Skip to main content

தாயின் கண்ணை தானம் செய்த பார்வையற்ற மாற்றுத் திறனாளி

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

visually impaired person who donated his mother eye

 

35 ஆண்டுகளாக வெளிச்சத்தையே பார்க்காத பார்வையற்ற மாற்றுத் திறனாளி தனது தாயாரின் கண்களைத் தானமாகக் கொடுத்து பார்வையற்றவர்களுக்கு ஒளியும், வழியும் ஏற்படுத்திக் கொடுத்த சம்பவம்  அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் அடுத்துள்ள கிராமம் மேலக்குறிச்சி. அங்குள்ள காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பழனிவேல் அஞ்சலையம்மாள் தம்பதியினரின் மகன் அசோக்குமார். 35 வயதுடைய அசோக் 1 வயதாக இருக்கும் போதே மூளைக் காய்ச்சலால் இரு கண்களின் பார்வையும் இழந்துள்ளார். அன்று முதல் 35 ஆண்டுகளாகப் பார்வை இல்லாமல் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அசோக்குமாரின் தாயார் அஞ்சலையம்மாள் உடல் நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில் கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளியான அசோக்குமார் தன்னைப் போல் பார்வை இல்லாதவர்களுக்காகத் தன் தாயாரின் கண்களைத் தானம் செய்ய முன்வந்தார். இதையடுத்து லயன்ஸ் கிளப் ஆஃப் நாகை போர்ட் டவுன் தலைவர் சண்முகம் மூலமாக கும்பகோணத்தில் உள்ள மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறியுள்ளார். அதன் பேரில் நள்ளிரவு மேலக்குறிச்சிக்கு சென்ற மருத்துவக் குழுவினர்கள் அஞ்சலையம்மாளின் கண்களைத் தானமாகப் பெற்றுச் சென்றனர்.

 

தனக்கு கண் பார்வை இல்லையென்றாலும் தன்னைப் போன்றவர்கள் கண் பார்வை பெற வேண்டும் என்பதற்காக தனது தாயின் கண்களைத் தானம் வழங்கிய அசோக்குமாரின் செயலைக் கண்டு அப்பகுதி கிராம மக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். பார்வையற்ற அசோக்குமார் இது குறித்து கூறும்போது, "தனக்கு ஒரு வயது இருக்கும் போது மூளைக்காய்ச்சல் காரணமாக பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்டு முற்றிலும் பார்வை இழந்துவிட்டது. இனி எனக்கு பார்வை கிடைக்க வாய்ப்பில்லை. இதனால் விழி இல்லாத வலியை நான் அனுபவித்து வருகிறேன். அந்த வலியை எனது அம்மாவின் கண்கள் மூலமாகப் பார்வையற்றவர்களுக்கு ஒளியாக்குவதற்காகத் தானமாக வழங்கி உள்ளேன். நாம் இறந்த பிறகு எரிக்கலாமா, புதைக்கலாமா என்று யோசிக்காமல் நமது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வர வேண்டும்" என்கிறார்.

 

தனக்கு பார்வை கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை தன்னைப் போல் உள்ளவர்களுக்கு பார்வை கிடைக்க வேண்டும் என்பதற்காக உடல் தானம் பற்றி அறியாத குக்கிராமத்தில் இருந்துகொண்டு  தன் தாயின் கண்களைத் தானம் செய்துள்ள அசோக்குமார், மனைவி மற்றும்  3 மற்றும் 2 வயதுள்ள இரண்டு பெண் குழந்தைகளோடு வறுமையின் பிடியில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தான் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா இல்லாத காரணத்தினால் எந்த வித அரசு சலுகைகளும் பெற முடியாமல் தவித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தனது எதிர்காலத்திற்கு உதவ வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார். அடுத்தவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் மனதுடைய அசோக்குமாரின் வாழ்விலும் ஒளியேற்றுவது நம் அனைவரின் கடமையாகும்.

 

 

சார்ந்த செய்திகள்