Skip to main content

‘இலங்கையை அழித்த அனுமனைத் தெரியுமா?’- ராமாயணத்தை எடுத்துவிட்ட ராஜவர்மன் எம்.எல்.ஏ!

Published on 19/11/2020 | Edited on 19/11/2020

 

VIRUDHUNAGAR DISTRICT ADMK MINISTER RAJENDRA BALAJI AND RAJAVARMAN MLA

 

மழை விட்டாலும் விடாது அடிக்கும் தூவானம் போல, சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கு எதிரான அரசியலை, அந்தத் தொகுதியின் நிர்வாகிகள் சிலர் செய்துவருகின்றனர். இத்தனைக்கும் ராஜவர்மன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அறிவுறுத்தலை ஏற்று, மோதல் போக்கினைக் கைவிட்டு, மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை சந்தித்து சால்வை அணிவித்து, சமாதானக்கொடி காட்டிவிட்டார். ஆனாலும், பழைய பகையை மனதில் நிறுத்தி, எம்.எல்.ஏ.வுக்கு குடைச்சல் தருவது தொடரவே செய்கிறது. 

 

VIRUDHUNAGAR DISTRICT ADMK MINISTER RAJENDRA BALAJI AND RAJAVARMAN MLA



உட்கட்சி பூசலை வெளிக்காட்டும் போஸ்டர்கள்! 

கட்சி போஸ்டர், பேனர், அழைப்பிதழ் மற்றும் விளம்பரங்களில் கடைப்பிடிக்கப்படும் ‘ப்ரோட்டாகால்’ மரபினை ராஜவர்மனும் மீறவே செய்தார். தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், அப்போது மாவட்ட கழக பொறுப்பாளராக இருந்த ராஜேந்திரபாலாஜியின் படமோ, பெயரோ இடம்பெறாமல் பார்த்துக்கொண்டார். இந்த ப்ரோட்டாகால் மீறலை, அமைச்சரின் ஆதரவாளர்களுக்கு பதிலடி தருவதற்காகவே செய்துவருகிறேன் என்று அப்போது காரணம் சொன்னார்.  

 

‘தற்போதுதான் ராசியாகிவிட்டேனே.. இன்னும் ஏன் என் போட்டோவோ, பெயரோ இல்லாமல் போஸ்டர் ஒட்டுகின்றனர்?’ என்பதுதான் அவரது தற்போதைய ஆதங்கம். ஏனென்றால், 18- ஆம் தேதி சாத்தூரில் நடந்த சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்ட விளம்பரங்களில், தொகுதி எம்.எல்.ஏ.வான ராஜவர்மனை இருட்டடிப்பு செய்துவிட்டனர். 

 

VIRUDHUNAGAR DISTRICT ADMK MINISTER RAJENDRA BALAJI AND RAJAVARMAN MLA

 

ராஜேந்திரபாலாஜி விசுவாசிகளோ “அமைச்சருக்கு எதிராக இந்த மாவட்டத்தில் ராஜவர்மன் கச்சைக் கட்டிக்கொண்டு நின்றதை மறந்துவிட முடியாது. கட்சியின் கட்டுப்பாட்டை குலைக்கும் வகையில், பகிரங்கமாக மேடையில், ‘எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்’ என்று பேசினாரே? அந்தப் பேச்சு எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கு அல்லவா தீனி போட்டது? இனி சாத்தூர் தொகுதியில் ராஜவர்மனுக்கு எப்படி சீட் கிடைக்கும்? இந்த மண்ணின் மைந்தன் ரவிச்சந்திரன், கிழக்கு மாவட்ட செயலாளராகி களமிறங்கிவிட்டார். அவருக்குத்தானே அடுத்து சாத்தூர் தொகுதியில் சீட் கிடைக்கும்! தொடர்ந்து ராஜேந்திரபாலாஜியை அவமரியாதை செய்த ராஜவர்மன், தனக்கான புரோட்டாகால் மரியாதையை எப்பட எதிர்பார்க்கலாம்? மறப்போம்; மன்னிப்போம் என்பது ராஜவர்மன் விஷயத்தில் நடக்கவே நடக்காது” என்று அடித்து சொல்கின்றனர். 

VIRUDHUNAGAR DISTRICT ADMK MINISTER RAJENDRA BALAJI AND RAJAVARMAN MLA


தனது மனக்குமுறலை, கே.டி.ராஜேந்திரபாலாஜி அமர்ந்திருந்த வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்ட மேடையிலேயே சுட்டிக்காட்டிய ராஜவர்மன். “நமக்குள் இருக்கின்ற சில மனமாச்சரியங்களை மறக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் சிலர் என்னை போனில் தொடர்பு கொண்டு பேசினார்கள். சாத்தூர் தொகுதியில் முகவர் கூட்டம் நடைபெறுகிறது. உங்களுடைய படம் போடவில்லை. நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் என்று கேட்டார்கள். தயவுகூர்ந்து எங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தாதீர்கள் என்று சொன்னேன். யாரும் என் படம் போட வேண்டிய அவசியமில்லை. சாத்தூர் தொகுதி மக்களின் உள்ளத்திலும் இதயத்திலும் மனதிலும் நான் இருப்பேன். ஆகையினால், தயவு செய்து எங்களைக் குழப்ப வேண்டாம். நான் என்றைக்கும் இந்த தொகுதி மக்களுடைய வேலைக்காரனாக இருந்து, இந்த இயக்கத்திற்கும் கழகத்திற்கும் விசுவாசமாக இருப்பேன். 

 

VIRUDHUNAGAR DISTRICT ADMK MINISTER RAJENDRA BALAJI AND RAJAVARMAN MLA

 

திமுக மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் அ.தி.மு.க.விலே சில குழப்பங்களைச் செய்து, இங்கே குளிர்காயப் பார்க்கிறார். அவர், சாத்தூர் ராமச்சந்திரன் என்று பெயரைப் போட்டுக்கொண்டு, இந்தத் தொகுதிக்கு என்ன நல்லது செய்திருக்கிறார்? நீங்கள் 20 ஆண்டு காலம் இங்கே சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளீர்கள். அமைச்சராகவும் இருந்திருக்கின்றீர்கள். இந்த தொகுதிக்கு என்னென்ன நன்மைகள் செய்திருக்கின்றீர்கள்? இது மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதல்வரும், துணை முதல்வரும், அண்ணன் கே.டி.ராஜேந்திரபாலாஜியும் என்னை வேட்பாளராக நிறுத்தி, நான் சட்டமன்ற உறுப்பினர் ஆனவுடன், இந்த ஒரு வருட 7 மாத காலத்தில், நான் சாத்தூர் தொகுதி மக்களுடைய உள்ளத்திலே நீக்கமற நிறைந்திருக்கிறேன் என்பது பொதுமக்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் தெரியும். ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.ஸுக்கும் தெரியும்.

 

ஆகவே, கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தால், 2021-ல் கே.டி.ராஜேந்திரபாலாஜி எங்கே வேட்பாளராக நிற்கிறாரோ, அவரை எதிர்த்து களமிறங்க வேண்டும். எனவே, இரவினில் ஒரு ஆட்டம்; பகலிலே ஒரு ஆட்டம் போடுவது இனிமேல் இந்த மாவட்டத்தில் நடக்காது. கே.கே.எஸ்.எஸ்.ஆர். எந்த தொகுதியில் நின்றாலும், அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, அ.தி.மு.க. பாடம் புகட்டும்” என்று கொளுத்திப் போட்டார். 

 

VIRUDHUNAGAR DISTRICT ADMK MINISTER RAJENDRA BALAJI AND RAJAVARMAN MLA

 

கூட்டம் முடிந்ததும்,‘என்னண்ணே இப்படி பேசிட்டீங்க?’என்று கேட்ட விசுவாசிகளிடம், இராமாயணத்தில் சீதையிடம் கணையாழி கொடுக்க வந்த அனுமனை பிரம்மாஸ்திரத்தால் கட்டிப்போட்டு, ராவண சபைக்கு இழுத்துவந்து, உருவத்தைக் கேலி செய்து,  இருக்கை தராமல் அவமதித்ததையும், இலங்கை சக்ரவர்த்தியான ராவணனுக்கு எதிரே, தன் வாலினாலேயே கோட்டை கட்டி, அதன் மீது அமர்ந்து அனுமன் வாதம் புரிந்ததையும், பிறகு அனுமனின் வாலில் தீ வைக்கப்பட்டு, அந்த வாலாலேயே தீயால் இலங்கை அழிந்ததையும் கூற, இடைமறித்த விசுவாசிகள்‘ அப்படியென்றால் நீங்கள் அனுமனா? எம்.எல்.ஏ. சீட் தரவில்லையென்றால், அழிப்பு வேலையில் ஈடுபடுவீர்களா?’என்று கேட்டதற்கு, ‘பார்க்கத்தானே போகின்றீர்கள்!’என்று சிரித்திருக்கிறார் ராஜவர்மன். ஆக, தேர்தலின்போது சாத்தூர் தொகுதியை, மா.செ. ராஜேந்திரபாலாஜியும், எம்.எல்.ஏ. ராஜவர்மனும் ஒரு வழி பண்ணாமல் விடமாட்டார்கள் என்பது, இப்போதே தெரிந்துவிட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.