Skip to main content

'என்னை கொன்று விடுங்கள்' - நெல்லை டவுனை பரபரக்க வைத்த கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறுவனின் வைரல் வீடியோ

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

Viral video of boy arrested-nellai town incident

 

காதல் விவகாரத்தில் பேன்சி ஸ்டோரில் வேலைக்கு வந்த 18 வயது சிறுமி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

 

நெல்லை டவுன் கீழ ரத வீதியில் 'ராஜா டாய்ஸ் அண்ட் ஃபேன்சி' என்ற பேன்சி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் திருப்பணிகரைசல் குளம் பகுதியைச் சேர்ந்த சந்தியா என்ற சிறுமி வேலை செய்து வந்தார். நேற்று காந்திமதி அம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள பேன்சி கடைக்கான குடோனில் இருந்து பொருட்களை எடுப்பதற்கு சந்தியா சென்றுள்ளார். ஆனால் குடோனுக்கு சென்ற சந்தியா நீண்ட நேரமாக திரும்பாததால் கடையில் இருப்பவர்கள் சந்தேகமடைந்தனர்.

 

கடையில் வேலை பார்க்கும் சக தோழிகள் குடோனுக்கு சென்று பார்த்தபோது கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் சந்தியா உயிரிழந்து கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக தோழிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி கொலை சம்பவம் குறித்து விசாரித்தனர். விசாரணையில் அதே கடையில் வேலை பார்த்து வந்த 17 வயது சிறுவன் சந்தியாவை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிய வந்ததால் சந்தியா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுவனிடம் பேசுவதை சந்தியா நிறுத்தியுள்ளார். தொடர்ந்து சந்தியாவின் சகோதரியை செல்போனில் தொடர்பு கொண்ட அந்த சிறுவன் தன்னிடம் சந்தியாவை பேச சொல்லுமாறு கெஞ்சியுள்ளார். ஆனால் இனிமேல் சந்தியா உன்னிடம் பேச மாட்டார் என எச்சரித்து விட்டு போனை துண்டித்து விட்டார்.

 

அதேநேரம் கடையின் உரிமையாளருக்கும் இந்த விவகாரம் தெரிய வர, வேலைக்கு வர வேண்டாம் என அந்த சிறுவனை கடையின் உரிமையாளர் நிறுத்திவிட்டார். இதனால் ஆத்திரத்தில் இருந்த சிறுவன் கத்தியுடன் சுற்றியுள்ளார். இந்நிலையில் சந்தியா குடோனுக்கு செல்வதை அறிந்து பின் தொடர்ந்து சென்ற சிறுவன் தன்னிடம் பேசும்படி கட்டாயப்படுத்தியதாகவும் அப்பொழுது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கையில் வைத்திருந்த கத்தியால் சந்தியாவை கொலை செய்துவிட்டு தப்பியது தெரிய வந்தது.

 

தனது மகள் கடைக்கு வேலைக்கு சென்ற இடத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது சந்தியாவின் வீட்டாருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்த அவர்கள் அனைவரும் கடைக்கு முன்பே வந்து கதறி அழுத காட்சிகள் கண்ணீரை வரவழைத்தது. இந்த கொலைக்கு நீதி வேண்டும் என உறவினர்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்ததைத் தொடர்ந்து போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் நெல்லை டவுன் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Viral video of boy arrested-nellai town incident

 

இந்நிலையில் போலீசார் அந்த சிறுவனை தேடிவந்த நிலையில் பிடிக்கப்பட்டான். போலீசார் சிறுவனை பிடித்து விசாரணை நடத்தும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் சிறுவனின் பேண்ட் பாக்கெட்டுகளில் போலீசார் ஏதேனும் ஆயுதங்கள் இருக்கிறதா என சோதனை செய்யும் காட்சியும் அந்த சிறுவன் என்னை கொன்றுவிடுங்கள் அவள் இல்லாத உலகில் நான் இருக்க மாட்டேன் என தெரிவிக்கும் காட்சியும் வைரலாகி வருகிறது.

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

தாய் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த துயரம்; நொடிப் பொழுதில் நடந்த சம்பவம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Son passed away in front of mother eyes

கோவை மாவட்டம், சாய்பாபா காலனி அருகே அமைந்துள்ளது கருப்புசாமி வீதி. இப்பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மகன் ஆனந்த். இளைஞரான இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அதனால், மிகுந்த கவனமுடன் குடும்பத்தினர் ஆனந்தை அரவணைப்புடன் வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆனந்திற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, கடந்த 21ஆம் தேதி இரவு ஆனந்தின் தாய் லட்சுமி மற்றும் பாட்டி சியாமளா இணைந்து ஆனந்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக பேருந்துக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திற்கு அருகே சாலையின் ஓரத்தில் நடந்துச் சென்றுள்ளனர். அப்போது, ஆனந்த் தாய் மற்றும் பாட்டியின் கையை விட்டு நடந்து சென்றுள்ளார். குடும்பத்தினரும் ஆனந்த் சரியாக நடந்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் கூடவே நடந்துச் சென்ற நிலையில், திடீரென ஆனந்த் அவ்வழியே வந்த துடியலூரில் இருந்து போத்தனூர் நோக்கி சென்ற பேருந்தின் முன்பாக பாய்ந்துள்ளார்.

நொடிப் பொழிதில், ஆனந்த் பேருந்து முன் பாய தாய் மற்றும் பாட்டியின் கண் முன்னே  தனியார் பேருந்தின் முன் பகுதியில் சிக்கியுள்ளார். இதில், பேருந்தின் முன் சக்கரம் தலையில் ஏறியதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மகன் தடுமாறி விழுந்து கண்முன்னே உயிரிழந்ததைப் பார்த்த தாய்  லட்சுமி நடுரோட்டில் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் உயிரழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்து நடந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், உடல் நிலை சரியில்லாத ஆனந்தை அவரது தாய் மற்றும் பாட்டி சாலையின் ஓரத்தில் நடந்து கூட்டிச் செல்கின்றனர். அப்போது, திடீரென் அவ்வழியாக தனியார் பேருந்து வந்துள்ளது. அதில், திடீரென ஆனந்த் பாய்கிறது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், தனியார் பேருந்து ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு வண்டியை திருப்பி பிரேக் அடித்துள்ளார். ஆனாலும், யாரும் எதிர்பாராத வகையில் தனியார் பேருந்தின் முன் சக்கரம் ஏறியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்யும் நெட்டிசன்கள் மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உடல் நிலை சரியில்லாத இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து முன்பு பாய்ந்து விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாயின் கண்முன்னே விபத்தில் சிக்கி மகன் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது