Skip to main content

பேரன், பேத்தி எடுத்தபின்னும் மனைவி மீது சந்தேகம்; கொலை செய்துவிட்டுத் தப்பிய கணவன்...!

Published on 08/12/2020 | Edited on 08/12/2020

 

vellore thirupattur incident


திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர், 45 வயதான கட்டிட மேஸ்திரி பன்னீர்செல்வம். இவரது மனைவி பரமேஸ்வரி. இவர் ஆம்பூரில் உள்ள ஒரு தோல் ஷு தொழிற்சாலையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டனர். வீட்டில் கணவன் மனைவி மட்டுமே உள்ளனர்.


மனைவி மீது கணவருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. குடித்துவிட்டு வந்து மனைவியை அடிக்கவும் செய்துள்ளார். இதனால், கரோனா காலத் தொடக்கத்தில் கணவரை விட்டுப் பிரிந்து தனியே வசிக்கத் தொடங்கியுள்ளார். அங்கே சென்றும் அடிக்கடி சண்டை போட்டுவிட்டு வருவாராம் பன்னீர்செல்வம்.


இந்நிலையில், டிசம்பர் 8ஆம் தேதி காலை, மனைவி இருந்த வீட்டுக்குள் சென்று, தகராறு செய்துள்ளார் பன்னீர்செல்வம். கணவன் – மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதமாகி, எங்கிட்டயே உன் திமிரைக் காட்டறயா என மனைவியைப் போட்டு அடித்து உதைத்துள்ளார். சிறிது நேரத்தில், சத்தம் நின்றுள்ளது. வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார் பன்னீர்செல்வம்.


கதவு திறந்திருந்துள்ளது, பரமேஸ்வரி வெளியே வரவில்லையாம். அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, கீழே விழுந்து கிடந்துள்ளார். பயந்துபோய், அருகில் சென்று மூச்சு வருகிறதா எனப் பார்த்தபோது, வரவில்லை. உடனடியாக இதுபற்றி ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்துக்குத் தகவல் கூறியதன் அடிப்படையில், போலீஸார் வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
 

cnc


பின்னர், உடலை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, தப்பிச் சென்ற பன்னீர்செல்வத்தை போலீஸார் தேடி வருகின்றனர். மூன்று மகள்களைத் திருமணம் செய்து, பேரன், பேத்தி எடுத்தபின் மனைவி மீது கணவன் சந்தேகப்பட்டு அடித்து உதைத்து கொலை செய்துள்ளது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்