Skip to main content

மது ஒழிப்பு போராளி, வைகோ தாயார் மாரியம்மாள் நினைவு தினம்... கிராம மக்கள் மலரஞ்சலி...

Published on 08/11/2018 | Edited on 08/11/2018
vaiko


 

நெல்லை மாவட்டம் வைகோவின் பூர்வீக கிராமமான கலிங்கப்பட்டியில் வைகோவின் தாயார் மாரியம்மாளின் மூன்றாமாண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
 

தன்னுடைய தள்ளாத முதிர்ந்த வயதிலும் சமூக அக்கரை கொண்ட வைகோவின் தாயார் சமூக நலனுக்காக வீதியில் வந்து போராடி வெற்றிகண்ட போராளி. கலிங்கப்பட்டி மட்டுமல்லாமல் சுற்றுப்பட்டிகளின் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர் வைகோவின் தாயாரான மாரியம்மாள்.
 

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கலிங்கப்பட்டியில் அரசு டாஸ்மாக் கடை திறந்ததை கிராம மக்களோடு எதிர்த்தவர். மக்களின் எதிர்ப்பையும் மீறி மதுக்கடை திறக்கப்பட்டதால் அதை மூட வேண்டும். மக்களுக்கு கேடு விளைவிக்கும் மது கூடாது என்று ரோட்டிற்கு வந்து போராடினார் மாரியம்மாள். அப்போது வயதில், நடை தள்ளாடும் முதுமை நிலை. அதையும் லட்சியப்  படுத்தாமல் வீதிக்கு வந்ததால் அவர் பின்னால் கலிங்கப்பட்டி கிராமமே திரண்டு போராடியது. மூன்று நாள் போராட்டத்திற்குப் பிறகு மக்களின் ஆவேசம் பீறிட மதுக்கடை உடைக்கப்பட்டது. கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று கலிங்கப்பட்டி டாஸ்மாக் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று நீதி மன்றம் உத்தரவிட்டது.
 

அந்த சம்பவத்திற்குப் பின்னர் முதுமை காரணமாக காலமானார் மாரியம்மாள். அவரது நினைவு நாளான இன்று அவரது கலிங்கப்பட்டி இல்லத்திலும், மெயின் வீதிகளிலும் வைக்கப்பட்ட அவரது படத்திற்கு ஊர் பொது மக்கள், இளைஞர்கள் குறிப்பாக பெண்கள் மலரஞ்சலி செலுத்தினர். தனது கலிங்கப்பட்டி இல்லம் வந்த வைகோ கலங்கிய கண்களோடு அங்குள்ள தன் தாயார் மாரியம்மாள் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மா.தி.மு.க.வின் மா.செ.க்களான ராஜேந்திரன், ரமேஷ், புதுக்கோட்டை செல்வம், வைகோவின் சகோதரர் ரவிச்சந்திரன் உட்பட பலர் மலரஞ்சலி செலுத்தினார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்