Skip to main content

பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழு உறுப்பினர் நியமனம்;ஆவணங்கள் சமர்ப்பிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!!

Published on 29/08/2018 | Edited on 29/08/2018

 

 

Court order

 

 

 

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுவில்  உறுப்பினராக தங்கமுத்து  நியமிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட செல்லதுரை நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஜூன் 14ம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், பல்கலைக்கழக சட்டவிதிகளை பின்பற்றி புதிய  துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழுவை அமைத்து, மூன்று மாதங்களுக்குள் துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் பட்டியலை தயாரிக்கவும் உத்தரவிட்டிருந்தது.


இந்த உத்தரவின் நகல் கிடைக்கும் முன், விடுமுறை தினமான ஜூன் 16ம் தேதியே பல்கலைக்கழக சிண்டிகேட்டின் அலுவல் சாரா உறுப்பினர்களாக உள்ள அரசு அதிகாரிகளின் அவசர கூட்டம் கூட்டப்பட்டு, துணைவேந்தர் தேர்வுக்குழுவுக்கு சிண்டிகேட் பிரதிநிதியாக தங்கமுத்து ( பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்)  நியமிக்கப்பட்டார்.


பேராசிரியர் தங்கமுத்து நியமனத்துக்கு தடை கோரி பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மகாலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.மணிக்குமார், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, சட்டவிதிகளை பின்பற்றாமல், அவசர கதியில் சிண்டிகேட் பிரதிநிதி நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் மீண்டும் தகுதியில்லாதவரே துணைவேந்தராக தேர்வு செய்யக் கூடிய அபாயம் இருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் தங்கசிவம் வாதிட்டார்.


அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் தங்கமுத்துவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், உயர் நீதிமன்றம் கொடுத்த 3 மாதங்களில் 2 மாதங்கள் கடந்துவிட்டதால் முக்கியத்துவம் வாய்ந்த துணை வேந்தர் பதவிகளை நீண்ட நாட்கள் காலியாக வைத்திருக்க முடியாது என தெரிவித்தார்.

இதையடுத்து, தங்கமுத்து நியமனம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நாளைய தினத்திற்கு ((ஆகஸ்ட் 30)) தள்ளிவைத்தனர்.  

சார்ந்த செய்திகள்