
சட்டக்கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூரில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி (14.01.2022) கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சட்டக்கல்லூரி இறுதியாண்டு பயின்ற மாணவர் அப்துல் ரஹீம் என்பவர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த போலீசார் முககவசம் அணியவில்லை என்று கூறி அபராதம் விதித்தனர். அதோடு அவர் பயணித்த சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இதன் காரணமாக அப்து ரஹிம்க்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அப்துல் ரஹீமை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை போலீசார் கடுமையாகத் தாக்கினர்.
இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அப்துல் ரஹீம் காவலர்களால் தாக்கப்பட்ட விவகார தொடர்பாக சிபிசிஐடி (CBCID) சார்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக அரசு சார்பில் அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், “பாதிக்கப்பட்ட மாணவருக்கு ரூ. 1 லட்சம் வழங்க வேண்டும். மாணவர் மீது தாக்குதல் நடத்திய 9 காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி.க்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் தரப்பில் மாநில மனித உரிமை ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படாத 7 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், நிவாரண தொகையை 1 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தி வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.