சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி, கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ரேஷன் கடைகளில் விலையில்லாமல் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மே மாத ரேஷன் பொருட்களைப் பெற ஏப்ரல் மாதம் 24, 25 ஆகிய தேதிகளில் வீடு, வீடாகச் சென்று டோக்கன் வழங்கப்படும். ரேஷன் பொருள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் ஆகியவை டோக்கன்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். சம்மந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர் டோக்கனில் உள்ள நாள், நேரத்தில் ரேஷன் கடைக்குச் சென்று பொருள்களைப் பெறலாம். ரேஷன் பொருட்களை டோக்கன் மற்றும் சமூக இடைவெளி முறையைக் கடைப்பிடித்து மக்கள் பெற்றுக்கொள்ளலாம்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.