பொதுமக்கள் தங்களது சொந்த செலவில் தூர்வாரப்பட்ட குளங்களில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலக்கிறது. கழிவுநீர் கலப்பதை தடுக்க பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறினர். ஆனால் அந்த புகார் கடிதத்திற்கு நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும், அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.
திருவாரூர் அருகே உள்ள கொடிக்கால்பாளையம் பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு தங்கள் சொந்த நிதியை வசூலித்து அப்பகுதியில் உள்ள 8- க்கும் மேற்பட்ட குளங்களை தூர்வாரி உள்ளனர்.
இந்நிலையில் திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட கொடிக்கால்பாளையத்தில் 7,8,9 ஆகிய மூன்று வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக போடப்பட்ட குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, அதில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பொதுமக்களால் தூர்வாரப்பட்ட இந்த குளங்களில் கலப்பதால் குளம் முழுவதும் கழிவு நீரால் நிரம்பி மாசு ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பாதாள சாக்கடை குழாய்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தேங்கி நிற்கும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோயும் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்லவேண்டிய நிகழ்வும் சமீபத்தில் நடந்து வருகின்றன.
"திருவாரூர் நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தகவல் தெரிவித்தும், மனு கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பகுதியை சீரமைத்து தரவேண்டும்," என்று கோரிக்கை விடுக்கின்றனர் அப்பகுதி பொதுமக்கள்.