Skip to main content

தொலைதூரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு மையங்கள் -தேர்வு எழுதுவோர் புலம்பல்!

Published on 05/02/2023 | Edited on 05/02/2023

 

 Teacher qualification examination centers at a distance - examination writers lament!

 

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப்பட்டு,  நிரப்பப்பட்டு வருகின்றன.  அரசுப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

 

பட்டதாரி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாளுக்கான தேர்வு 31-1-2023 லிருந்து 12-2-2023ஆம் தேதி வரை உள்ள தேதிகளில் நடத்தப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் 2022-ஆம் ஆண்டிற்கான  தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்துகொள்பவர்கள், கணினி அடிப்படையிலான தேர்வு அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்குச் சென்று தேர்வு எழுதவேண்டும். இந்தத் தேர்வு மையங்கள் அமைந்திருக்கும் ஊர்களும் இடங்களும், தேர்வு எழுதுபவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாகப் பலரும் புலம்புகின்றனர்.

 

உதாரணத்துக்கு, தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணிபுரியும் விருதுநகரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு,  ராஜபாளையம் – வெங்காநல்லூர்,  அய்யனார் கோவில் சாலை அருகிலுள்ள ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரி, தேர்வு மையமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விருதுநகரிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் உள்ளது அந்த மையம், ராஜபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ள ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரிக்கு, ராஜபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து  செல்வதற்கு பேருந்து வசதி எதுவும் இல்லை. கூடுதல் வாடகைக்கு ஆட்டோ பிடித்துத்தான் செல்ல வேண்டும்.  பிப்ரவரி 6-ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் தேர்வுக்கு, காலை 7-30 மணிக்கு அந்த மையத்தில் ஆஜராகிவிட வேண்டும்.  காலை 8-15 மணிக்கெல்லாம் அந்தக் கல்லூரியின் கதவை அடைத்துவிடுவார்கள்.

 

 Teacher qualification examination centers at a distance - examination writers lament!

 

அந்தப் பெண் காலை 7-30 மணிக்குள் அந்த ராஜபாளையம் மையத்தில்  இருக்க வேண்டுமென்றால், விருதுநகரிலிருந்து  அதிகாலை கும்மிருட்டில் அல்லவா கிளம்பவேண்டும்? அந்த நேரத்தில் பேருந்துதான் சரிவரக் கிடைக்குமா? அந்தப் பெண்ணால் சாப்பிடத்தான் முடியுமா? எத்தனை அவதிப்பட வேண்டும். இதில் கொடுமை என்னவென்றால், விருதுநகரில் இருந்து 12 கி.மீ. தொலைவிலுள்ள ஆமத்தூரில் உள்ள AAA பொறியியல் கல்லூரியும் ஒரு தேர்வு மையமாகச் செயல்படுவதுதான். விருதுநகரில் இருந்து வருபவர்களை,  பக்கத்திலேயே உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதவைத்தால் வீண் அலைச்சலைத் தவிர்க்கமுடியுமே? அந்த அளவுக்கு மனிதநேய சிந்தனையுடன் இயங்கிட ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மனம் இல்லாதது ஏனோ?

 

2013 முதல் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60000-க்கும் மேற்பட்டவர்களுக்கு இன்றுவரையிலும் பணி நியமன ஆணை கிடைக்காத நிலையில், 2022-க்கான ஆசிரியர் தகுதித் தேர்வை இப்போது இவர்கள் எழுதினால் என்ன? எழுதாவிட்டால் என்ன? என்ற அலட்சியத்தாலோ என்னவோ, தேர்வு எழுதுபவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் விதத்தில்  தேர்வு மையங்களை அமைத்திருக்கின்றனர்.

 

அந்தத் தேர்வு அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய  அறிவுறுத்தல்களில் ஒன்று – தேர்வு மையத்தை மாற்றுவதற்கான எந்த கோரிக்கையும் எந்தச் சூழ்நிலையிலும் பரிசீலிக்கப்படமாட்டாது.

 

தேர்வு எழுதுபவர்களை அவஸ்தைக்கு உள்ளாக்கவேண்டும் என்பதில் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அப்படியென்ன நிர்ப்பந்தமோ? 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.