Skip to main content

கைவிட்ட அரசு... கை கொடுத்த ஆசிரியர்கள்... விபத்தில் இறந்த ஆசிரியர் குடும்பத்திற்கு ரூ 17.5 லட்சம் உதவி... 

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

 

2003ம் ஆண்டுக்கு பிறகு பணிக்கு வரும் யாருக்கும் பணிப் பாதுகாப்பு இல்லை என்றும் ஓய்வுக்கு பிறகு பண பலனோ, ஓய்வூதியமோ இல்லை. இந்த கோரிக்கையை முன்வைத்து ஜாக்டோ ஜியோ போராட்டங்கள் செய்யும் போதெல்லாம் பரிசீலனை செய்வோம் என்று சொல்லி சமாளிக்கும் அரசாங்கம் அதன் பிறகு மறந்து போவது வேதனை. 
 

கடந்த 2006 முதல் தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்கம், பணிக்காலத்தில் இறக்கும் ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை நிதியாக வழங்கி வருகின்றனர். 
இந்த நிலையில்தான் 2011 முதல் தேர்தலின் போது மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவோம் என்று ஜெ சொன்னார். அதன் பிறகு 2 முறை வென்றார். ஆனால் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. ஆனாலும் இதற்காக ஒரு குழுவை அமைத்தார். அந்த குழுவின் அறிக்கையும் கிடப்பில் உள்ளது. இந்த கோரிக்கையை ஜாக்டோ ஜியோ தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

 

Teachers financial Help


 

இந்த நிலையில் தான் கரூர் மாவட்டம் திருக்காம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி கணித ஆசிரியர் குமாரவேல் கடந்த 8 ந் தேதி விபத்தில் பலியானார். 


பணியை 2005 ம் ஆண்டு தோகமலை ஒன்றியம் பாதிரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொடங்கி 2010 ம் ஆண்டு முதல் க.பரமத்தி ஒன்றியம் சி.கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றினார். இவருக்கு மனைவி மற்றும் 3 சின்னக் குழந்தைகள் உள்ளனர். குடும்பத்திற்காண வருமானத்தை ஈட்டிய குமாரவேல் விபத்தில் பலியானதால் அந்தக் குடும்பமே உடைந்து போனது. சின்னக் குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படி காலத்தை கழிப்பது என்ற வேதனையில் மனைவி பிரேமா வேதனையில் எழமுடியாமல் முடங்கினார்.


 

 

இந்த நிலையில் தான் குமாரவேல் இறந்த செய்தியை மாவட்டத்தலைவர் செல்வராஜ் மூலம் அறிந்த தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்க மாவட்டத் தலைவர்தியாகராஜன், சங்கத்தின் மூலம் நிதி வழங்க முடிவு செய்து, வாட்ஸ் அப் மூலம் நிதி திரட்டினார்.

 நிதியளிப்பு நிகழ்ச்சியும் ஏற்பாடானது. நிகழ்ச்சியில் தியாகராஜனுடன் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் தாஸ், முன்னாள் தலைமை செயலக ஊழியர் சங்க செயலாளர் வெங்கடேசன். மற்றும் அமைப்பின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நிர்வாகிகள், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர். 


இந்நிகழ்வில் மாநிலச் செயலர் ரமேஷ், தலைமை நிலையச்செயலர் அருள் குமார் , மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர். நிகழ்சியில் குமாரவேல் குடும்பத்திற்கு ரூ 17.5 லட்சம் நிதி வழங்கப்பட்டது. நிதியை மூன்று குழந்தைகளின் பெயரில் தலா ரூ 5 லட்சம் டெபாசிட் செய்தும், மீதமுள்ள தொகை தற்காலிக செலவினங்களுக்காக தொகையாக வழங்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில் கரூர் மாவட்டப்பொருளாளர் சண்முகநாதன் நன்றி தெரிவித்தார்.

  
இது மட்டுமின்றி ஆசிரியர் குமாரவேல் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜியின் நண்பர் என்பதால் தனிப்பட்ட முறையில் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.   அரசாங்கம் கைவிட்டதால் அந்த குடும்பத்தை காக்க ஆசிரியர்கள் அதிகாரிகள் கைகொடுத்துள்ளது நெகிழச் செய்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்