Skip to main content

ரவுடிகளுக்கு மாமூல் சரக்கு; டாஸ்மாக் கடைகள் மூடல்

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

வேலூர் மாவட்டத்தில் மாதம் ஒரு ரவுடி கொலை என்பது சர்வ சாதாரணமாகியுள்ளது. ஆள்கடத்தல், தொழிலதிபர்கள் மிரட்டல் என்பதும் சர்வசாதாரணமாகியுள்ளது. இவைகள் எதையும் பெரிதாக கண்டுக்கொள்வதில்லை வேலூர் மாவட்ட காவல்துறை. ஏதாவது ஒரு விவகாரம் பெரிதானால் மட்டும்மே போலீஸ் தீவிரமாக களமிறங்குகிறது.

 

tasmac


சமீபத்தில் நடைபெற்ற ரவுடிகளுக்கு இடையிலான பழிவாங்கல் கொலைகளில் எல்லாம், கொலை செய்தவர்களை போலீஸ் கைது செய்யவில்லை. கொலை செய்தவர்களே வந்து சரண்டரானதே அதிகம். இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் போடாமல் செல்பவன், டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் செல்பவர்களிடம் காட்டும் வீரத்தில் 10 சதவிதத்தை ரவுடிகளிடம் காட்டினால் அவர்கள் அடங்கி கிடப்பார்கள். அதை செய்யாததால் அரசு நிறுவனத்தையே மாமூல் கொடு என மிரட்டும் அளவுக்கு வந்து நிற்கிறார்கள்.


வேலூர் மாநகரத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அரசின் டாஸ்மாக் நிறுவனம் மதுபான கடைகளை நடத்திவருகிறது. இந்த கடைகளுக்கு வரும் அந்தந்த பகுதி ரவுடிகள், தினமும் வருவோம் மாமூல் தரவேண்டும் என கடை சூப்பர்வைஸர் மற்றும் விற்பனையாளரை மிரட்டி 100, 200 என பணம் கேட்டுள்ளனர். இவர்களும் ஏரியா ரவுடியாச்சே, இவனுங்களை பகைச்சிக்கிட்டா பிரச்சனை செய்வான்களே என பணம் தரத்துவங்கியுள்ளனர். ரவுடிகளும் வாங்கிக்கொண்டு இருந்துள்ளனர்.


தற்போது பணத்துக்கு பதில் ஒரு கேஸ் பீர் கொடு, ஒரு கேஸ் ரம் கொடு என மிரட்டி வாங்கி செல்கின்றனராம். ஒரு கேஸ் என்பது 12 பாட்டில்கள் இருக்குமாம். 100, 200 மாமூல் தரலாம். தினமும் ஒரு பெட்டி வாங்கிச்சென்றால் 1200 ரூபாய் நட்டம் வருகிறது. இதனை சரிக்கட்ட முடியாமல் தவிக்கிறார்களாம்.


கடந்த மே 3ந் தேதி இரவு காகிதப்பட்டரையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு வந்த அந்த பகுதி ரவுடி ஒருவன், இரண்டு பெட்டி சரக்கு கேட்க, விற்பனையாளர் செல்வகுமார், தர முடியாது எனச்சொல்ல அந்த விற்பனையாளரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடையை பூட்டியுள்ளார். இதுப்பற்றி சக விற்பனையாளர்களுக்கு சொல்ல அவர்களும் குறிப்பிட்ட நேரத்துக்கு 2 மணி நேரம் முன்பாகவே கடையை பூட்டியுள்ளனர். வேலூர் வடக்கு காவல்நிலையத்துக்கு சென்று முறையிட்டுள்ளனர்.

 

police


கடையை பூட்டிய விவகாரம் பெரும் பரபரப்பானது. இதுப்பற்றிய தகவல் டாஸ்மாக் நிறுவனத்தின் மாவட்ட அதிகாரிகளிடம், தாங்கள் ரவுடிகளால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து கூறியுள்ளனர் கடையின் விற்பனையாளர்கள். இது பற்றி தீவிரமாக ஆலோசனை நடத்தியவர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு இது பற்றி தகவல் கூறியுள்ளனர் என்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்