Skip to main content

பிடிபட்டது 'டி23' புலி... நிம்மதி பெருமூச்சுவிட்ட மசினகுடி!

Published on 15/10/2021 | Edited on 15/10/2021

 

 Captured 'T23' tiger

 

நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேவன் எஸ்டேட் பகுதியில் மக்களை அச்சுறுத்திவந்த 'டி23' புலியை 21வது நாளாக வனத்துறையினர் தேடிவந்த நிலையில், நேற்று (14.10.2021) இரவு மசினகுடியிலிருந்து தெப்பக்காடு செல்லும் வழியில் பழுதான வாகனத்தைச் சிலர் சரி செய்துகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகப் புலி ஒன்று சாலையைக் கடப்பதைப் பார்த்தவர்கள் வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனர். இரவு 10 மணியளவில் வனத்துறையினரின் மருத்துவக் குழு சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மயக்க ஊசி செலுத்தப்பட்ட பிறகும் புலி அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்றதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து, மசினகுடியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் புலி பதுங்கிய அடர் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. காலை சுமார் 2 மணிவரை இந்த தேடுதல் வேட்டை நடந்தும் புலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பிறகு தேடுதல் வேட்டை  தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

 

udanpirape

 

இந்நிலையில், இன்று காலை மீண்டும் புலியைப் பிடிக்கும் பணியை வனத்துறையினர் துவங்கினர். அப்போது மீண்டும் புலி, சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மான்களை வேட்டையாடத் துரத்தியதைக் கண்ட வனத்துறையினர் மற்றும் வனத்துறை மருத்துவர்கள் குழு, புலியைத் தொடர்ந்து கண்காணித்தனர். இதனால் மசினகுடி - தெப்பக்காடு இடையிலான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து 'டி23' புலிக்கு மீண்டும் ஒரு மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில், தற்போது வனத்துறையினர் 21 நாள் போராட்டத்திற்குப் பின் புலியைப் பிடித்துள்ளனர்.   

 

 Captured 'T23' tiger

 

புலியைப் பிடிக்கும் பணியில் 80க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள், 5 ட்ரான் கேமராக்கள், 50க்கும் மேற்பட்ட இமேஜ் ட்ராப் தானியங்கி கேமராக்கள், அதிரடி படையினர், இரண்டு கும்கி யானைகள், சிப்பிப்பாறை நாய்கள், மோப்ப நாய்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. புலியைக் கொல்ல வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து புலியைக் கொல்லக்கூடாது என வழக்கு கூட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. இந்நிலையில், புலியைக் கொல்லாமல் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டதால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது மசினகுடி.

 

இப்புலி இதுவரை நான்கு மனிதர்களையும், 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

கொடைக்கானலில் காட்டுத்தீ; சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest fire in Kodaikanal;Warning to tourists

கோடை கால வெயில் வாட்டிவரும் நிலையில் வனத்துறை சார்பில் வனத்தில் வசிக்கும் விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் பணி ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இதேநிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் மறுபுறம் வனங்களில் ஏற்படும் காட்டுத்தீ விபத்துகள் வனத்துறைக்கு சவால் மிகுந்ததாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில் வனத்துறை தீவிரமாக அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் தற்போது வறண்ட வானிலையே நிலவி வருகிறது. நேற்று முதல் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கிளாவரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டது. சுமார் 100 ஏக்கருக்கு மேல் காட்டுத்தீ படர்ந்துள்ளது. இதனால் கொடைக்கானலில் உள்ள மலைக்கிராமங்களில் பல இடங்கள் புகைமூட்டத்தில் சிக்கியுள்ளது. சாலை ஓரத்திலேயே காட்டுத்தீ மற்றும் புகை படர்ந்திருக்கும் காட்சிகள் அங்கு சுற்றுலா செல்வோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலம் தொடங்கி அதிகப்படியாக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வரும் நிலையில் காட்டுத்தீ சம்பவத்தால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கையும் விடுத்துள்ளது. வனத்துறை மற்றும் மின்சாரத் துறை, தீயணைப்புத் துறையினர் ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் காட்டுத்தீயானது அணைக்கப்படுவதற்கான தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.