கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி ஒன்றியத்தில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தில் தனிநபர் இல்ல கழிவறை கட்டியதில் ரூ 1 கோடிக்கு மேல் ஊழல் செய்த வட்டார ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட ஊழலுக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள் ஒப்பந்ததாரர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காட்டுமன்னார்குடி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார்.

மாநில செயலாளர் சின்னதுரை, மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் செல்லையா, வட்ட செயலாளர் வெற்றிவீரன். சி.பி.எம் வட்ட செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட சம்பந்தப்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் காட்டுமன்னார்குடி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமார் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரை சந்தித்து மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரி கூறுகையில் புகார் குறித்து மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு, அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.