Skip to main content

டாஸ்மாக் மது பாட்டிலுக்குள் பாம்பா? 

Published on 16/04/2021 | Edited on 16/04/2021
small snake inside tasmac wine bottle

 

அரியலூர் மாவட்டம் தாபழூர் அருகே உள்ளது சுத்தமல்லி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் 36 வயது சுரேஷ். இவர் நேற்று முன்தினம் (14.04.2021) டாஸ்மாக் கடையில் 150 மில்லி அளவுள்ள குவார்ட்டர் மது பாட்டில் வாங்கி சென்றுள்ளார். தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றவர், செல்லும் வழியிலேயே பாதி அளவு மதுவை குடித்துவிட்டு மீதி மதுவை வீட்டுக்குச் சென்று குடிப்பது என வைத்துள்ளார். வீட்டுக்குச் சென்றவர் வீட்டிலிருந்த டம்ளர் ஒன்றை எடுத்து மது குடிப்பதற்காக பாட்டிலிலிருந்து டம்ளரில் மதுவை ஊற்றும்போது, அந்தப் பாட்டிலுக்குள் கட்டுவிரியன் பாம்பு குட்டி ஒன்று இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ், குடும்பத்தினரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

 

அப்போது அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அவரது குடும்பத்தினர் அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்து, அன்றிரவே வீட்டிற்கும் அழைத்து வந்துள்ளனர். சுரேஷ் தற்போது நலமாக உள்ளார். இந்த தகவல் மாவட்டம் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் டிஎஸ்பி தேவராஜன், போலீஸ் மூலம் விசாரணை செய்துள்ளார். அவர் பத்திரிகை மீடியாக்களிடம் கூறும்போது “சுரேஷ் தொடர்ந்து மதுகுடித்து வந்துள்ளார். அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் குடி பழக்கத்தை நிறுத்துமாறு குடும்பத்தினர் வலியுறுத்தி வந்துள்ளனர்.

 

சுரேஷ் அவர்கள் பேச்சைக் கேட்கவில்லை. அவரது குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்காகவும் அவரைப் பயமுறுத்துவதற்காகவும் அவர் கொண்டுவந்த பாதி மது இருந்த பாட்டிலில், சுரேஷின் மகள் தனம் என்பவர் பாம்பு குட்டியை அதற்குள் போட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் உண்மைத்தன்மையை அறிய பாம்பு குட்டியிருந்த மது பாட்டில் டாஸ்மாக் அதிகாரிகள் மூலம் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வுக்குப் பிறகே உண்மைத்தன்மை தெரியவரும்" என்று கூறியுள்ளார். இதுகுறித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் செல்வராஜ், “சுரேஷ் வைத்திருந்த மீதி பாட்டிலை அவரது குடும்பத்தினரிடம் இருந்து பெறப்பட்டு அதை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பாம்பு குட்டி பாட்டிலில் கிடந்ததா? யாராவது அதில் உள்ளே போட்டார்களா? என்பது விரைவில் தெரியவரும்” என்கிறார்.

 

இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள், “150 மில்லி அளவு கொண்ட சிறிய பாட்டில் அதற்குள் பாம்பு குட்டி நுழைவதற்கு வாய்ப்பு மிக மிகக் குறைவு. அது தயாரிக்கும்போது தவறுதலாக பாம்பு குட்டி அதனுள்ளே நுழைந்திருந்தது உண்மையே என்றாலும் கூட, அந்தப் பாட்டிலை வாங்கிய சுரேஷ் அதைப் பார்த்திருக்க வேண்டும். மேலும் அதை முதலில் பாதி திறந்து குடிக்கும்போதாவது அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பது நிச்சயம் அவரது கண்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே, இது திட்டமிட்டு சுரேஷ் அல்லது அவரது குடும்பத்தினர் யாராவது செய்திருக்கும் செயல் என்றே தோன்றுகிறது. இருந்தபோதிலும் டாஸ்மாக் அதிகாரிகள் மீதியிருந்த மதுவை அந்தப் பாட்டிலுடன் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். ஆய்வு முடிவுகள் வந்த பிறகு இது விளையாட்டா அல்லது விபரீதமா, என்ன நடந்தது என்பது தெரிந்துவிடும்” என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
PMK Ramdas campaign supporting the candidate

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இத்தகைய சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - செளமியா அன்புமணி, விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ்  காஞ்சிபுரம் - ஜோதி வெங்கடேஷ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து கோவடி கிராமத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு நல்ல வேட்பாளரான முரளி சங்கர் நிறைய படித்துள்ளார். 6 மொழிகளில் சரளமாக பேசுவார். மக்களை பற்றி சிந்திக்க கூடியவர். மக்களுக்காக பாடுபடக்கூடியவர். சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார்” எனத் தெரிவித்தார். 

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.