புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு திங்கள்கிழமை காலை கோட்டைப்பட்டிணம், ரஹ்மத் நகரில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் கடல் பல்லிகள் வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து, திருப்புனவாசல் கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகுபதி மற்றும் காவலர்கள் மணிகண்டன், ரெங்கநாதன், ஐயப்பன் ஆகியோருடன் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் ரஹ்மத் நகரில் ஹாஜி அலி ( 55 ) என்பரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் பின்புறம் சோதனை செய்தபோது பதப்படுத்தப்பட்ட கடல் பல்லிகள் சுமார் 32 கிலோ, அதாவது சுமார் 18 ஆயிரம் கடல் பல்லிகள் 6 சாக்கு மூட்டையில் இருந்தது. அதன் மதிப்பு சுமார் 5 லட்சமாகும்.

மேற்படி சாக்கு மூட்டையில் இருந்த கடல்பல்லிகள் கைப்பற்றப்பட்டது. ஆனால் கடத்தலுக்காக கடல்பல்லிகளை பதுக்கி வைத்திருந்த ஹாஜி அலி தப்பியோடிவிட்டார். கைப்பற்றப்பட்ட கடல்பல்லிகளை அறந்தாங்கி வனச்சரக அலுவலர் இராஜசேகரனிடம் கடலோர காவல் படையினர் ஒப்படைத்தனர். அரசால் தடை செய்யப்பட்டுள்ள கடல்வாழ் உயிரினங்கள் இந்தப் பகுதியில் தொடர்ந்து கடத்தப்படுவதும், அடிக்கடி பிடிபடுவதும் வழக்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.