![nn](http://image.nakkheeran.in/cdn/farfuture/yqAcPs0goRox5kQ5h2qINf5-mNKbQOHmy76TK1yOYg8/1720071720/sites/default/files/inline-images/a72527.jpg)
தமிழகத்தில் ஜூலை 9 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் நேற்று இரவு சென்னையில் பல இடங்களில் கனமழை பொழிந்திருந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் சோழிங்கநல்லூரில் அதிகபட்சமாக 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 7 சென்டிமீட்டர் மழையும், தேனாம்பேட்டை, அயனாவரத்தில் தலா 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. ஆவடியில் 6 சென்டிமீட்டர் மழையும், ஜமீன் கொரட்டூரில் 5.2 சென்டிமீட்டர் மழையும், திருத்தணி 5 சென்டிமீட்டர் மழையும், சோழவரம் 4.2 சென்டிமீட்டர் மழையும், செங்குன்றம் 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
கடல் பகுதிகளில் அலை சீற்றம் அதிகமாக இருக்கும் என ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மணல் அரிப்பு ஏற்பட்டு சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு கடல் நீரானது வெளியேறி உள்ளது. பட்டினம்பாக்கம் லூப் சாலையில் இருந்து சுமார் 50 மீட்டருக்கு உள்ளாக கடல் அலை வீசி வந்த நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக கடற்கரை பகுதியில் நீடிக்கும் சீற்றம் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மணல் அரிப்பு ஏற்பட்டு சாலை அருகே கடல் நீர் புகுந்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கிருந்த படகுகளை மீனவர்கள் மாற்று இடத்தில் வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.