கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி, அரசு டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு வழங்கியதாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதோடு, சென்னை, கோவை மாநகராட்சி பகுதிகளில் வழங்கப்பட்ட டெண்டர் முறைகேடுகள் தொடர்பான வழக்கையும் விசாரித்து வருகின்றனர்.
மேலும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்களான ஆலம் கோல்ட் அண்ட் டைமண்ட் மற்றும் கே.சி.பி. இன்ஃப்ரா நிறுவனங்களின் ரூ.110 கோடி மதிப்பிலான நிரந்தர வைப்புநிதியை முடக்கக்கோரி சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை மனுத்தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில் 2017ஆம் ஆண்டுக்கு பின் துவங்கப்பட்ட இந்த நிரந்தர வைப்புநிதியினை மாநகராட்சி டெண்டர்களுக்காக வழங்கப்பட்ட பணம் எனச் சந்தேகிப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த மனுவை இன்று விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜே.ஓம்பிரகாஷ், வங்கி நிரந்தர வைப்புநிதியை முடக்க உத்தரவிட்டார். மேலும், லஞ்ச ஒழிப்பு துறை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி இரண்டு நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.