Skip to main content

ரூ.1 கோடி மதிப்பிலான செல்லாத நோட்டுகள் பறிமுதல்! 

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
Rs. 1 crore worth of invalid notes confiscated
 

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை  பகுதியைச் சேர்ந்தவர் சபீர். இவர் தனது நண்பர்களான பாலாஜி மற்றும் கோகுலநாதன் உள்ளிட்டோர் உடன் சேர்ந்து கூட்டாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பின்போது இவர்களிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு ஆயிரம் ரூபாய் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன. இதனைத் தான் மாற்றிக் கொடுப்பதாகக் கூறி சபீர் தனது பங்குதாரர்களிடம் செல்லாத ஆயிரம் ரூபாய் மற்றும் ஐந்நூறு ரூபாய் நோட்டுகளை வாங்கியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் பல ஆண்டுகள் கடந்தும் செல்லாத இந்த ஆயிரம் ரூபாய் மற்றும் ஐந்நூறு ரூபாய்  நோட்டுகளை தற்போது வரை சபீர் மாற்றிக் கொடுக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.

இதனிடையே சபீரிடம் பணத்தைக் கொடுத்தவர்களில் ஒருவரான பாலாஜி என்பவர் உயிரிழந்து விட்டார். அதே சமயம் பணம் கொடுத்துப் பல ஆண்டுகளாகியும் பணத்தைத் திருப்பிக் கொடுக்காதது குறித்து சபீரிடம் கோகுலநாதன் கேட்டுள்ளார். அப்போது, “அந்தப் பணம் தன்னிடம் அப்படியே இருக்கிறது. இதனை மாற்றுவதற்காக முயற்சி செய்த வகையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளேன். அந்தப் பணத்தைக் கொடுத்துவிட்டு ரூபாய் நோட்டுக்களை எடுத்துச் செல்” எனக் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து கோகுலநாதன் இது குறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “சபீர் எனபவர் மாசிநாயக்கன்பட்டியில் உள்ள அவரது வீட்டில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். 

Rs. 1 crore worth of invalid notes confiscated
 


அதனைத் தொடர்ந்து இந்தப் புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் சபீரின் வீட்டிலிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான செல்லாத ஆயிரம் மற்றும் ஐந்நூறு ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர். மேலும் செல்லாத ஆயிரம் மற்றும் ஐந்நூறு ரூபாய் நோட்டுக்களைப் பதுக்கி வைத்திருந்த சபீரை கைது செய்தனர். இதனையடுத்து சபீரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். அதே சமயம் பறிமுதல் செய்யப்பட்ட செல்லாத ஆயிரம் மற்றும் ஐந்நூறு நோட்டுகளையும் போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ஆயிரம் மற்றும் ஐந்நூறு ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தனியார் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை; பெற்றோர் குற்றச்சாட்டு

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Student incident in private college hostel; Accusation of parents

திருச்சியில் தனியார் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் இந்த உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து டோல் பிளாசா அருகே தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி,பொறியியல் கல்லூரி, கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மாரியம்மன் தெருவைச் சேர்ந்த அமமுக நகர செயலாளர் பாலாஜியின் மகள் தாரணி (வயது 19) விடுதியில் தங்கி பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

தாரணி காய்ச்சல் காரணமாக நேற்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விடுதிக்கு சென்றுள்ளார். மேலும் காய்ச்சல் அதிகமாக இருந்ததால் கல்லூரிக்கு செல்லாமல் விடுதியில் தங்கியுள்ளார். தாரணி காய்ச்சல் குறித்து பேராசிரியரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் விடுமுறை எடுக்கக்கூடாது நிர்வாகத்திடம் கேட்டு தான் விடுமுறை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். காய்ச்சல் அதிகமாக இருந்ததால் தாரணி விடுதியிலேயே தங்கி உள்ளார். விடுதியில் தங்கியிருந்த சக மாணவிகள் கல்லூரிக்கு சென்று மீண்டும் விடுதிக்கு வந்தபோது அறை உள்புறம் தாழ்பாள் போடப்பட்டு இருந்ததால் இது குறித்து விடுதி சக மாணவிகள் நிர்வாகத்திடம் தெரிவித்தனர். அதன்படி நிர்வாகத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஜன்னலில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்ததாக கூறி அவரை படுக்கையில் வைத்திருந்தனர்.

மேலும் இறந்த தாரணியை பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் தாரணிக்கு காய்ச்சல் காரணமாக தந்தை பாலாஜியிடம் தொலைபேசியில் மதியம் 12 மணி அளவில்  தொடர்பு கொண்டு காய்ச்சலால் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு தாரணி தெரிவித்துள்ளார். இதனால் நேற்று மதியம் 3 மணி அளவில் கல்லூரிக்கு வந்த தாரணியின் தந்தை பாலாஜி நெடு நேரமாகி அவரது மகளை பார்க்க விடாமல் காத்திருக்க வைத்துள்ளனர். நெடுநேரத்திற்கு பின் ஆறு மணி அளவில்  தாரணி இறந்துவிட்டார் என விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலாஜி உறவினர்களுடன் தனது மகளுக்கு நீதி வேண்டும், தனது மகளை கல்லூரி நிர்வாகத்தினர் கொலை செய்துள்ளனர். மேலும் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ கதிரவனின் கல்லூரி என்பதால் காவல்துறையினர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்கள்.

இறந்த தாரணி ஜன்னல் கம்பியில் துப்பட்டாவைக் கட்டி ஒரு கையில் துப்பட்டாவை கழுத்தை நெரித்து தற்கொலை செய்ததாக விடுதி நிர்வாகம் தெரிவிக்கின்றனர். ஆனால் தாரணியின் கழுத்தில் பெல்டால் கழுத்தை நெரித்து இறந்தது போன்று உள்ளதால் இதற்கு உரிய விசாரணை வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் மாணவியின் தாய், 'தனது மகளை கல்லூரி நிர்வாகத்தினர் கொன்று விட்டனர். எனது மகளை பறிகொடுத்து விட்டேனே' எனக் கூறி கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

Next Story

தொடர்ந்து ஆடு திருடும் கும்பலால் விவசாயிகள் அச்சம்

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
 Farmers are afraid of gangs who keep stealing goats

ஈரோட்டில் தொடர்ந்து ஆடு திருடும் கும்பலால் விவசாயிகள் அச்சமடைந்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்துள்ள கரியாக்கவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (52). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 22 ஆம் தேதி மாலையில் பட்டியில் ஆடுகளை அடைத்து  வைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். அதன் பின்னர் நேற்று முன்தினம் காலை பட்டியில் வந்து பார்த்தபோது அதிலிருந்த 3 ஆடுகள் மாயமாகி இருந்தன. விசாரணையில் மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.

அதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த வடிவில் (66) என்பவரது பட்டியில் இருந்த மூன்று ஆடுகளும் திருட்டுப் போயிருந்தது. அடுத்தடுத்து இரண்டு பட்டியில் ஆடுகள் திருட்டுப் போன சம்பவம் அப்பகுதி விவசாயிகளுடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருட்டுப் போன ஆடுகளின் மதிப்பு ரூ.80 ஆயிரம் இருக்கும். இது குறித்து மொடக்குறிச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மொடக்குறிச்சி பகுதியில் தொடர்ந்து கால்நடைகள் திருட்டுப் போய் வந்தது குறிப்பிடத்தக்கது.