Skip to main content

ரவுடி சரமாரியாக வெட்டி கொலை; 4 பேர் கும்பல் வெறிச்செயல்! 

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

Rowdy passed away four arrested mettur

 

மேட்டூர் அருகே ரவுடியை, நான்கு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடல் சின்னையரெட்டி தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் ராஜேஷ் (26). வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார். தற்போது கருமலைக்கூடலில் உள்ளூர் மாரியம்மன் கோயிலில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி வியாழக்கிழமை (ஏப். 7) இரவு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு ராஜேஷ், தனது அக்காள் மகளுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். 


அப்போது அவரை பின்தொடர்ந்து இரண்டு மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு வந்துள்ளனர். திடீரென்று அவர்கள் ராஜேஷின் வண்டி மீது மோதினர். இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அவரை மர்ம நபர்கள் சுற்றி வளைத்து, அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.  இதைப் பார்த்த ராஜேஷின் அக்காள் மகளான 7 வயது சிறுமி, அங்கிருந்து பயந்து ஓடிவிட்டாள். 


சம்பவத்தின்போது ராஜேஷின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதனால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். பலத்த வெட்டுக்காயம் அடைந்த ராஜேஷை, அங்கிருந்தவர்கள் மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். 


இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மேட்டூர் டி.எஸ்.பி விஜயகுமார், கருமலைக்கூடல் காவல் ஆய்வாளர் சுகுமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். கொலையுண்ட ராஜேஷ் மீது கருமலைக்கூடல் காவல்நிலையத்தில் கொலை, அடிதடி வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. அவர் மீது ஹிஸ்டரி ஷீட் எனப்படும் சரித்திர பதிவேடும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 


ரவுடியான ராஜேஷை, அவருக்கு எதிர் தரப்பைச் சேர்ந்த ரவுடிகள் தொழில் போட்டியினாலோ அல்லது பழிக்குப்பழியாகவோ கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். கோயில் திருவிழாவில் இருந்து வீடு திரும்பும் வழியில் ராஜேஷை கொலை செய்திருக்கும் கும்பல், அவரை திருவிழா திடலில் இருந்தே நோட்டம் விட்டிருக்கலாம் எனத்தெரிகிறது. கொலையுண்ட நபரின் செல்போனிற்கு வந்த அழைப்புகள், சென்ற அழைப்புகள், பதிவாகியுள்ள எண்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். 


இந்த சம்பவம் கருமலைக்கூடல் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.