Skip to main content

அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் 

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Road blockade on behalf of all central trade unions

விலைவாசி உயர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கும் திட்டத்தினைக் கைவிட வேண்டும்; அங்கன்வாடி, மக்களைத் தேடி மருத்துவம் திட்டப் பணி ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; புதிய ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்; புதிய மோட்டார் வாகனத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; ஆன்லைன் அபராதம் விதித்தல் முறையைக் கைவிட வேண்டும். தேசிய குறைந்தபட்ச ஊதியமாக 26 ஆயிரம் ரூபாயை நிர்ணயம் செய்ய வேண்டும்; திருத்தம் செய்துள்ள தொழிலாளர் சட்டங்களான நான்கு சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும்; மின்சார சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும்; முன்பணம் செலுத்தி மின்சாரத்தை உபயோகிக்கும் ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதைக் கைவிட வேண்டும்; மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி சட்டத்தின்படி ஆண்டுக்கு 200 நாட்கள் வேலையும் நாளொன்றிற்கு அறுநூறு ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

அந்த வகையில், ராணிப்பேட்டை முத்துக்கடை அருகே மத்திய அரசைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். 

சார்ந்த செய்திகள்