திருச்செங்கோடு அருகே, கடன் சுமையால் ரிக் லாரி அதிபர் தனது மனைவி, மகளுடன் விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த எலச்சிபாளையம் அருகே உள்ள கூத்தம்பூண்டி சாயக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (54). ரிக் லாரி அதிபர். இவருடைய மனைவி நிர்மலா (47). இவர்களுடைய மகள் சவுமியா (21). நவீன்குமார் என்ற மகனும் உள்ளார்.
சவுமியா, கோவை சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், மோகனுக்கு ரிக் லாரி தொழிலில் பலத்த நட்டம் ஏற்பட்டதால், கடன் நெருக்கடிக்கு ஆளானார். இதனால் அவர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். அதிலும் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
![RICK TRUCK BUSINESS MAN FAMILY INCIDENT POLICE INVESTIGATION NAMAKKAL DISTRICT](http://image.nakkheeran.in/cdn/farfuture/JzK0cb-2e2TB0hFWV77DxoU_pCYV8BI8tkrFJCDfQyc/1575370277/sites/default/files/inline-images/NAMAKKAL3.jpg)
கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டு அடிக்கடி குடைச்சல் கொடுத்து வந்தனர். இதனால் அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்தார். கல்லூரியில் இருந்து விடுமுறைக்கு வீட்டிற்கு வந்திருந்த மகள் சவுமியாவிடமும் கூறியுள்ளார்.
இந்நிலையில், திங்கள்கிழமை (டிச. 2) அதிகாலையில் மோகன், நிர்மலா, சவுமியா ஆகியோர் தென்னை மரங்களில் பூச்சிகளை அழிப்பதற்காக பயன்படுத்தக்கூடிய விஷ மாத்திரைகளை தண்ணீரில் கலக்கிக் குடித்தனர்.
உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மோகன், தனது தம்பி அன்பழகன் என்பவருக்கு செல்போன் மூலம் நாங்கள் மூவரும் விஷம் குடித்துவிட்டோம். நாங்கள் இறந்தவுடன் இறுதிச்சடங்குகளை நல்லபடியாக செய்துவிடு என்று தகவல் சொல்லி இருக்கிறார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அன்பழகன் விரைந்து அவருடைய வீட்டுக்கு வந்தார். கதவு உள்பக்கம் தாழிடப்பட்டு இருந்தது. கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.
அங்கே அவருடைய அண்ணி நிர்மலா இறந்து கிடந்தார். அண்ணன் மோகன், அவருடைய மகள் சவுமியா ஆகியோர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். இருவரையும் மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே மோகன் இறந்தார். தனியார் மருத்துவமனையிர் சேர்க்கப்பட்ட சவுமியாவும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மோகனின் மகன் நவீன்குமார், பிஎஸ்சி வேளாண்மை படிப்பை முடித்துவிட்டு, மஹாராஷ்டிரா மாநிலத்தில் வேலை செய்து வந்ததால், அவர் மட்டும் இந்த பெரும் துயரத்தில் இருந்து தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேலகவுண்டன்பட்டி காவல்துறையினர் சடங்களைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடன் சுமையால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.