Skip to main content

குடிநீரில் மனிதக்கழிவுகளை கலந்த விவகாரம்; குற்றவாளியை நெருங்கிய போலீசார்

Published on 13/01/2023 | Edited on 13/01/2023

 

Pudukkottai district vengaivayal water tank incident 

 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கந்தர்வக்கோட்டை தொகுதியில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் உள்ள ஒரு சில குழந்தைகளுக்கு கடந்த மாதம் ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அப்போது, குழந்தைகளின் ஒவ்வாமைக்கு குடிநீரில் கிருமி கலந்துள்ளதா என ஆய்வு செய்யுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

 

டிசம்பர் 25ந் தேதி பட்டியலின மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் உள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து வந்த தண்ணீர் கலங்கலாக உள்ளதாக அப்பகுதி பெண்கள் கூறியுள்ளனர். இதனால் அங்கு இருந்தவர்கள் உடனடியாக மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஏறி பார்த்த போது தொட்டியில் இருந்த குடிநீரில் மனிதக் கழிவு மிதந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

இதுகுறித்து தகவலறிந்த விசிக நிர்வாகிகள், கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை ஆகியோர் வந்து பொதுமக்களிடம் விவரங்களைக் கேட்டறிந்து குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். மேலும், சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை தமிழ்நாடு அரசு கவனத்திற்கும் கொண்டு சென்றார். அதே நேரத்தில் அன்னவாசல் ஒன்றிய அதிகாரிகள், வெள்ளனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்ததுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

 

இந்தப் பிரச்சனை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் மறுநாள் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்ட போது பட்டியலின மக்கள் தங்கள் கிராமத்தில் தீண்டாமை உள்ளதாக கூறினார்கள். உடனே அங்குள்ள அய்யனார் கோயிலுக்கு அவர்களை அழைத்துச் சென்று வழிபடச் செய்ததோடு அருகில் உள்ள டீ கடையில் ஆய்வு செய்து அங்கிருந்த குவளைகளை கைப்பற்றி டீ கடைக்காரரை கைது செய்தனர்.

 

மறுநாள் அமைச்சர் மெய்யநாதன் சமத்துவ வழிபாட்டில் கலந்து கொண்டு பேசும்போது, மாற்று குடிநீர் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீரில் மனிதக் கழிவுகளை கலந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏடிஎஸ்பி தலைமையில் 11 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். குடிநீரில் மனிதக் கழிவு கலந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டங்கள் செய்தனர்.

 

சிறப்பு புலனாய்வு குழுவினர் முதற்கட்டமாக சுமார் 70 பேரிடம் விசாரணை செய்த பிறகு 7 பேருக்கு சம்மன் கொடுத்து வெள்ளனூர் காவல் நிலையம் அழைத்து நீண்ட நேரம் விசாரணை செய்து வீடியோ பதிவு செய்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட நாளில் அந்தப் பகுதியில் சுற்றிய இளைஞர்களின் செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கென தனியாக ஒரு தொழில்நுட்ப புலனாய்வு குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். இந்த குழுக்களின் புலனாய்வில் குறிப்பிட்ட நபரிடம் வந்து நிற்கிறது. அந்த நபர் பற்றிய விவரங்களை வெளியிட போலீசார் தயாராகும் நிலையில் பல்வேறு நிலைகளில் இருந்தும் தடைகள் வருவதாகக் கூறப்படுகிறது. அதனால் யார் அந்த நபர் என்பதை வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளனர்.

 

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களிடமே விசாரணை நடப்பதாகவும் ஒரு தலைபட்சமாக விசாரணை இருப்பதாகவும், அதனால் விசாரணையை மாற்ற வேண்டும் என்றும் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் மற்றும் எவிடன்ஸ் கதிர் ஆகியோர் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். "பொதுமக்களின் குடிநீரில் மனிதக் கழிவுகளை கலந்து மாவட்டத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்திய சமூக விரோதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் எந்தவித பாரபட்சமும் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார் கவிவர்மன். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆவடியில் இரட்டைக் கொலை; போலீசாரிடம் சிக்கிய செல்போன்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
aavadi siddha doctor and his wife incident Cell phone caught by the police

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்துள்ள மிட்டனமல்லியில் சித்த மருத்துவர் சிவன் நாயர் என்பவரும், அவரது மனைவி பிரசன்னகுமாரி ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இத்தகைய சூழலில் அவரது இல்லத்திற்கு சிகிச்சைக்கு வருவதுபோல் நேற்று (28.04.2024) இரவு வீட்டிற்குள் மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். அதன்பின்னர் சித்த மருத்துவர் சிவன் நாயரையும் அவரது மனைவி பிரசன்னகுமாரியையும் மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாராணை மேற்கொண்டனர். அப்போது இந்த இரட்டைக் கொலை நடந்த இடத்தில் செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதோடு கொலையான மருத்துவரிடம் சிகிச்சை பெற வந்தவர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கொலையாளிகள் பல லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடி அருகே சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி கழுத்து அறுத்து கொடூரக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தேவகவுடா மகன் மீது பாலியல் குற்றச்சாட்டு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Deve Gowda's son issue in karnataka 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இத்தகைய சூழலில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

Deve Gowda's son issue in karnataka 

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் அவரைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Deve Gowda's son issue in karnataka 

இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எச்.டி.ரேவண்ணா வீட்டில் பணியாற்றும் சமையலர் அளித்த புகாரின் பேரில் ரேவண்ணா மீது பாலியல் சீண்டல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹோலேநர்சிபூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எச்.டி. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் மீது ஏற்கெனவே பாலியல் புகார் உள்ள நிலையில் தற்போது தந்தை மீதும் பாலியல் புகார் எழுந்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.