Skip to main content

காலங்காலமாய் சிற்பங்களை பொக்கிஷமாய் காவல் காக்கும் கிராமத்தினர்!

Published on 21/07/2021 | Edited on 21/07/2021

 

pudukkottai district temple security work for the peoples

 

காலங்கள் மாற மாற கலாச்சாரங்களும் மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் பல இடங்களில் மரபுகளை மாற்ற முடியாது என்று வாழையடி வாழையாக சில நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் உள்ளன. அப்படி ஒரு மரபு மாறாத நிகழ்வு குடுமியான்மலையில் இன்றளவும் நடந்து கொண்டிருக்கிறது.

 

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு மேற்கே 20 கி.மீ. தூரத்தில் உள்ளது குடுமியான்மலை. தொடக்கத்தில் குன்றியூர், திருநக்குன்று என்றும் இருந்த ஊர் பிறகு குடுமியான்மலையானது. இங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அகிலாண்டேஸ்வரி உடனுறை சிகாகிரீஸ்வரர் கோயில் உள்ளது. முற்காலப் பாண்டியர்களால் அவர்களுக்கே உரித்தான சதுர வடிவ ஆவுடையுடன் பிரமாண்ட லிங்கத்தை மலையில் குடைந்து அமைத்திருக்கிறார்கள். பிறகு வந்த முத்தரையர்கள், கொடும்பாளூர் வேளிர் மருமகள் (முத்தரையர் மகள்), குலோத்துங்கன், பிற்காலப் பாண்டியர்கள், மதுரை வானர்கள், வானதிரையர்கள், நாயக்கர்கள், தொண்டைமான்கள் எனப் பலரும் திருப்பணிகள் செய்ததாகக் கல்வெட்டுகளும் உள்ளது. தொண்டைமான் மன்னர்கள் முடிசூடும் இடமாகவும் இது இருந்துள்ளது. ஆயிரங்கால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், இசை மண்டபம் எனப் பல கலைப் பொக்கிஷங்கள் உள்ளன.

 

pudukkottai district temple security work for the peoples

 

பிற்காலத்தில் படையெடுப்பில் அழகிய சிற்பங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. மலையின் அடியில் குடைவரைக் கோயிலை ஒட்டி மலையிலேயே விநாயகர் சிற்பம் பொறிக்கப்பட்டு, அதன் அருகில் இசை மொழி (கிரந்தம்) கல்வெட்டுகளும் உள்ளன. இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த தளத்திற்குச் சுற்றுலாப் பயணிகளின் வருகையோ மிகக் குறைவாகவே உள்ளது.

 

இத்தனை சிறப்பு மிக்க கலைப் பொக்கிஷங்களைப் பாதுகாக்க உருவம்பட்டி, காட்டுப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்களை நியமித்துள்ளனர். ஒரு நாளைக்கு 12 பேர் வீதம் இரவு பகலாக மெய்காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக இவர்களுக்கு விவசாய நிலம் கொடுத்திருக்கிறார்கள். பிறகு மாதம் ரூ.100 சம்பளம் தான். பல வருடங்களாக இது தான் சம்பளம்.

 

pudukkottai district temple security work for the peoples

 

இது குறித்து காவல் பணியிலிருந்தவர்கள் கூறும் போது, "எங்கள் முன்னோர்கள் பாதுகாத்த இந்த பொக்கிஷங்களை இப்போது நாங்கள் காவல் காக்கிறோம். எங்களுக்கு பிறகு எங்கள் பிள்ளைகள் காவல் பணி செய்வார்கள். இரவில் 12 பேரும் கம்புகளோடு கோயில் முழுவதும் ஆங்காங்கே பணியில் இருப்போம். பகலில் நிர்வாகிகள் இருவர் பணி செய்வார்கள். எந்த வேலை என்றாலும் அதனை ஒதுக்கி வைத்துவிட்டு காவல் பணிக்கு வந்துவிடுவோம். 

 

pudukkottai district temple security work for the peoples

 

ஆனால், இத்தனை பொக்கிஷங்களையும் காலங்காலமாய் பாதுகாக்கும் எங்களுக்கு பல வருடமாக ரூபாய் 100 தான்  சம்பளம். ஒரு நாள் செலவுக்குக் கூட பற்றாத சம்பளம் தான். ஆனால் கடவுள் பணி நமக்கு கிடைத்திருப்பதாக நினைத்து காவல் பணி செய்கிறோம். இனி மேலாவது எங்களுக்கு சம்பளத்தை உயர்த்திக் கொடுத்தால் நன்றாக இருக்கும்" என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.