
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இந்த வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து லக்கிம்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த மாவட்டத்தில் இணையச் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தியை, பன்வீர் கிராமத்திற்குள் நுழைய அனுமதிக்காமல் எல்லையிலேயே போலீசார் கைதுசெய்து வீட்டுச் சிறையில் வைத்தனர். உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருச்சியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் திரண்ட காங்கிரஸ் கட்சியினர், கரூர் எம்.பி. ஜோதிமணி தலைமையில் கோஷங்களை எழுப்பியபடி கோட்டை வாசலுக்கு வந்து அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட ஜோதிமணி எம்.பி., மாநில துணைத் தலைவரும் முன்னாள் மேயருமாகிய சுஜாதா, மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன், மாவட்ட தலைவர்கள் ஜவஹர், கோவிந்தராஜன், கலைச்செல்வன் உள்ளிட்ட நுாற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.