திருச்சி சோமரசம்பேட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வாசன் வேலியைச் சேர்ந்தவர் சிவலிங்கம்(40). வெங்காய வியாபாரி. இவரது மனைவி தனலட்சுமி. தனலட்சுமிக்கும், மற்றொருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனை அறிந்த சிவலிங்கம் மனைவியை கண்டித்துள்ளார். இருந்தாலும் திருமணத்தை மீறிய உறவைத் தொடர்ந்து நீடித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக சம்பவத்தன்று கணவன் - மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. திருமணத்தை மீறிய உறவுக்கு கணவர் இடையூறாக இருப்பதால் அவரைத் தீர்த்துக் கட்ட தனலட்சுமி முடிவு செய்திருக்கிறார்.
அதன்படி, சம்பத்தன்று தனது ஆண் நண்பர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து சிவலிங்கத்தை அடித்துக் கொலை செய்திருக்கிறார். பின்னர் அவரது உடலை சாக்கு பையில் திணித்து கயிற்றால் கட்டி ஆம்னி வேனில் சுடுகாட்டிற்கு எரிக்க கொண்டு சென்றபோது சோமரசம்பேட்டை போலீசார் பிடியில் சிக்கினர். இந்த கொலை தொடர்பாக தனலட்சுமி மற்றும் ஆறுமுகம், சுமதி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஆண் நண்பர் செந்தில்குமார் தலைமறைவாக இருந்தார். அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பதுங்கி இருந்த செந்தில்குமாரை சோமரசம்பேட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.