Skip to main content

பி.எச்.பாண்டியனுக்கு மணிமண்டபம்... ஓபிஎஸ், இபிஎஸ் பங்கேற்பு!

Published on 05/01/2021 | Edited on 05/01/2021

 

php memorial mandapam

 

'வானளாவிய அதிகாரம் கொண்டவர் சபாநாயகர்' என்று அதிரடியாகக் கூறி சட்டசபையையே தன் சட்டைப் பைக்குள் கொண்டுவந்தவர், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள கோவிந்தப்பேரி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த (பால்ஹெக்டர் பாண்டியன்) பி.எச்.பாண்டியன். எந்த ஒரு விஷயம் என்றாலும் சட்டத்தின் பார்வைதான் அவரிடமிருக்கும் துணிச்சல். 

 

1972 அக்டோபர் 17ல் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை ஆரம்பித்த போது அவரது கட்சியில் இணைந்து நான்கு முறை எம்.எல்.ஏ.வானவர். எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டின் மூலம் தொகுதியைப் பளபளப்பாக்கலாம் என பிற எம்.எல்.ஏ.க்களுக்கு முன்னுதாரணமானவர். தனது தொகுதி முழுக்க சாலைகள், பள்ளிக்கட்டிடங்கள், தொகுதி மாணவ மாணவியர் பயன்படும் வகையில் 5லட்சம் மதிப்புள்ள, தனது 5 ஏக்கர் நிலத்தைத் தானமாகக் கொடுத்து முதன் முதலாக மனோ கல்லூரியைக் கொண்டு வந்தவர் பி.எச்.பாண்டியன்.

 

பி.எச்.பாண்டியனின் சட்டத்துணிச்சலைக் கண்ட எம்.ஜி.ஆர். அவரைத் தன் அமைச்சரவையின் சபாநாயகராக்கினார். அந்தச் சமயம் சட்ட நகலை எரித்ததற்காக பதினோறு தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை நீக்கிய பி.எச்.பாண்டியன் சட்டசபையில் வானளாவிய அதிகாரம் கொண்ட சபாநாயகர் என்று அதிரடியாக அறிவித்தபோதுதான் சபாநாயகருக்கான அதிகாரத் தன்மை வெளிப்பட்டது. சர்வ வல்லமை கொண்ட தேர்தல் கமிசனின் ஆணையர் டி.என்.சேஷனுக்கு இணையாகச் செயல்பட்டவர்.

 

மறைந்த பி.எச்.பாண்டியனுக்கு மணிமண்டபமும் அவரது திருவுருவச் சிலையும் அவர் வாழ்ந்த கோவிந்தப் பேரியில் அமைக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் இருவரும் பங்கேற்று பி.எச்.பாண்டியனின் திருவுருவச் சிலையையும், மணி மண்டபத்தையும் திறந்து வைத்தனர். 

 

cnc

 

விழாவில் அமைச்சர்களான உதயகுமார், ராஜலட்சுமி, செல்லூர் ராஜூ மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். பி.எச்.பாண்டியனின் மகனும், அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரும், அ.தி.மு.க.வின் வழிகாட்டுக் குழுவின் உறுப்பினருமான மனோஜ் பாண்டியன் வரவேற்றார்.

 

 


 

சார்ந்த செய்திகள்