Skip to main content

தொழிலதிபரை கடத்திய கும்பல்! விரைந்து மீட்ட போலீஸ்

Published on 28/06/2023 | Edited on 28/06/2023

 

Person rescued by police and arrested six

 

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மகன் ராமராஜ் (32). இவரது மனைவி ஹேமலதா. ராமராஜ் திருப்பூரில் ஜவுளி, பனியன் நிறுவனம் நடத்தி வந்தார். அப்போது சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த ராஜேஷ் (41) என்பவருடன் பனியன் வியாபாரம் செய்த வகையில் பழக்கம் ஏற்பட்டது. 

 

இந்த பழக்கத்தின் அடிப்படையில் ராமராஜ், ராஜேஷிடம் ரூ. 9 லட்சம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. அந்த தொகையை ராஜேஷுக்கு ராமராஜ் 2 வருடங்களாகத் திருப்பிக் கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், திருப்பூரில் ராமராஜ் நடத்தி வந்த பனியன் கம்பெனியில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலத்தில் உள்ள தனது மனைவி ஹேமலதாவின் தந்தை வீட்டில் வந்து தங்கி இருந்தார். 

 

இது பற்றிய தகவல் அறிந்த ராஜேஷ், ராமராஜை கடத்திச் சென்று மிரட்டி அவரிடம் கொடுத்த கடனை வாங்க முடிவு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த 24 ஆம் தேதி கூலிப் படையினரான சென்னையைச் சேர்ந்த முஸ்தபா (28), சென்னை ஆவடியைச் சேர்ந்த கீர்த்தி (38), தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையைச் சேர்ந்த மணிகண்டன் (34), அதே பகுதியைச் சேர்ந்த வசந்த் (24), சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த இருதயராஜ் (43) ஆகிய 6 பேரும் மணிகண்டம் அருகே உள்ள தனியார் கல்லூரி முன்பு நின்று கொண்டு ராமராஜை அங்கு வரவழைத்துள்ளனர். 

 

அங்கு சென்ற ராமராஜை, ராஜேஷ் உள்ளிட்ட கூலிப்படையினர் துப்பாக்கி முனையில் காரில் கடத்திச் சென்றனர். கடன் கொடுத்தவர்கள் அழைத்ததாகக் கூறி சென்ற கணவர் இரவாகியும் வீட்டிற்கு வராததால் பதற்றம் அடைந்த ஹேமலதா, இதுகுறித்து மணிகண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர்.

 

பின்னர் திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் மேற்பார்வையில் போலீஸார் தனசேகர், இளையராஜா ஆகியோர் ராமராஜன் செல்போன் சிக்னலை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்த செல்போன் சிக்னலை வைத்து கடத்தல் கும்பல் இருந்த இடத்தை அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று ராமராஜை மீட்டனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட மேற்குறிப்பிட்ட ஆறு நபர்களையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கைத்துப்பாக்கி, அரிவாள், கார் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.