![nn](http://image.nakkheeran.in/cdn/farfuture/uhf-Sav-hu5X2RrE_5zC3_vsjmNMRNbSGqcC7aIDGnE/1719980212/sites/default/files/inline-images/a72498.jpg)
இரண்டாவது விமான நிலையமாக காஞ்சிபுரம் பரந்தூரில் 5,358 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய விமான நிலையம் அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கான நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த விமான நிலைய பணிக்காக மேலும் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள எடையார்பாக்கம் கிராமத்தில் மேலும் 147.11 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான அனுமதி ஆணையை தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிக்கு வர்த்தகத் துறை வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே இந்தத் திட்டத்திற்காக பரந்தூர் அருகே உள்ள வளத்தூர், தண்டலூர், சிங்கிலி பாடி, அக்கம்மாப்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட 12 கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்துவதற்கான அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் நீர்நிலைகள் மற்றும் தரிசு நிலங்களை தவிர்த்து குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கான முயற்சியில் வருவாய்த்துறை ஈடுபட்டுள்ளது.
தொடர்ந்து பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அண்மையில் தமிழகத்தை விட்டு வெளியேறி ஆந்திராவில் குடியேற இருப்பதாக அவர்கள் அறிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வரும் ஏகனாபுரம் மக்கள் அரசு பேருந்தில் ஏறிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் அரசு பேருந்தில் ஏறிய ஏகனாபுரம் மக்கள் அங்கிருந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியான நிலையில் பேருந்தில் பயணித்த கிராம மக்கள் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.