Skip to main content

ஆன்லைனில் மட்டுமே ஆக்சிஜன் படுக்கைகள்.. நிஜத்தில்..? சிக்கலில் நோயாளிகள்..!

Published on 25/05/2021 | Edited on 25/05/2021

 

Oxygen beds only online .. really ..? Patients in trouble ..!

 

கரோனா பெருந்தொற்றால் உயிருக்குப் போராடும் மக்களைக் காப்பாற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் போராடிவருகிறது. ஆனால் மக்களை ஏமாற்றும் விதமாக ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாத மருத்துவமனைகளிலும், ஆக்சிஜன் படுக்கைகள் இருப்பதாகக் கூறி உண்மைக்குப் புறம்பான தகவல்களை இணையதளத்தில் பதிவிட்டு, மக்களின் உயிருடன் சிவகங்கை மாவட்டக் மருத்துவத்துறை விளையாடுவதாக அம்மாவட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

 

கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையால் அனேகர் பாதிப்புக்குள்ளான வேளையில், பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கை அமல்படுத்திய தமிழக அரசு, மக்களிடையே தனிமனித இடைவெளி, முகக் கவசம், சானிடைசர் பயன்பாடு, தடுப்பூசி உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது. இதேவேளையில், நோய்த் தொற்றுள்ள மக்களைக் காக்க தமிழகமெங்கும் மருத்துவமனைகளை முடுக்கிவிட்டு, "படுக்கைகளுக்காக அலைய வேண்டாம். எங்கெங்கு ஆக்சிஜன் படுக்கைகள் இருக்கிறது என்பதை இணைய வெளியில் வெளியிட்டுள்ளோம். அதனைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்" என இணைய முகவரியை வெளியிட்டது. எனினும், மக்களை ஏமாற்றும் விதமாக இங்கு ஆக்சிஜன் படுக்கைகள் இருக்கிறது என இணையவெளியில் தினசரி அப்லோட் செய்துவிட்டு, அங்கு சென்றால் இந்த வசதியே இங்கில்லை எனக்கூறி நோயாளிகளை அலையவிடும் சோகம் சிவகங்கை மாவட்டத்தில் அரங்கேறிவருகிறது.

 

Oxygen beds only online .. really ..? Patients in trouble ..!

 

கரோனா தொற்று நோயாளிகளுக்காக சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட தாலுகாக்களில் சிவகங்கை மருத்துவக் கல்லூரி, சிவகங்கை அரசு மருத்துவமனை, காரைக்குடி பழைய அரசு மருத்துவமனை, தேவக்கோட்டை அரசு மருத்துவமனை, திருப்புத்தூர் அரசு மருத்துவமனை, சுவீடிஷ் மருத்துவமனை, மானாமதுரை அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுமாக மொத்தம் மாவட்டத்தில் 1,300 ஆக்சிஜன் படுக்கைகளும், 1,700 சாதாரன படுக்கைகளும் உள்ளன. இதில் 24.05.2021 கணக்கீட்டின்படி இறப்பு 6 எனவும், சிகிச்சை முடிந்து நலம்பெற்று வீடு திரும்பியோர் 85 எனவும் சிகிச்சையிலுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 1,729 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இது இப்படியிருக்க இளையான்குடி பகுதி மக்களோ, "இளையான்குடியைச் சுற்றியுள்ள 55 கிராமத்திற்கும் ஒரே மருத்துவமனை இந்த இளையான்குடி அரசு மருத்துவமனையே. எங்க ஊர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா பாசிட்டிவ் வர, ஆக்சிஜன் படுக்கை வசதிக்காக இணையதளத்தில் தேடினால் அருகிலுள்ள இளையான்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதி இருப்பதாக அது தெரிவித்தது. அதனை நம்பி இங்கு வந்து பார்த்தால் ஆண்கள் பிரிவிற்கு 7 படுக்கை வசதிகளும், பெண்கள் பிரிவிற்கு 7 படுக்கை வசதிகளுடன் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் ஒரு படுக்கையும் உள்ளன. ஆனால் ஆக்சிஜன் படுக்கை என்பதே இங்கு கிடையாது. அங்கு கேட்டால் சரியான பதிலில்லை. அதற்கப்புறம் 33 கி.மீ தூரமுள்ள சிவகங்கை மருத்துவமனைக்கு வந்து சேர்க்க வேண்டியதாயிற்று. இதில் ஆக்சிஜனோடு ஆம்புலன்ஸ் கிடைக்க நாங்க பட்ட வேதனை சொல்லி மாளாது. தவறான தகவல்களை இணையத்தில் போட்டு எங்களை அலைக்கழிக்கிறது சிவகங்கை மாவட்ட மருத்துவத்துறை. இந்த தவறான தகவலால் காலதாமதம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு..?" என கேள்வி எழுப்புகின்றனர்.

 

இளையான்குடி வாசிகளின் கூற்றை உறுதிசெய்யும் விதமாக படுக்கை வசதிகள் குறித்து மக்கள் அறிந்துகொள்ள தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இணையதள முகவரியில், இளையான்குடி அரசு மருத்துவமனையில் 37 ஆக்சிஜன் படுக்கைகள், திருப்புவனம் அரசு மருத்துவமனையில் 50 ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் சிங்கம்புணரி அரசு ஆக்சிஜன் படுக்கைகள் 45 காலியாக உள்ளதாக உண்மைக்கு மாறான தகவல்களை இணையதளம் தெரிவித்துள்ளது. ஏன் இந்தக் குழப்பம்..? என மருத்துவத்துறையிடம் கேள்வி எழுப்பினால், "அங்கெல்லாம் தயார் செய்துகொண்டிருக்கின்றோம். அதனால்தான் அங்கு படுக்கை இருப்பதாக பதிவிடப்பட்டுள்ளது" என பதில் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக தேர்தல் அறிக்கை; ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. பின்பு பதிவான வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. ஆட்சியைத் தக்க வைக்கும் வகையில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இத்தகைய சூழலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி நேற்று (14.04.2024) வெளியிட்டார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு உருவாக்கிய இந்த தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பாஜக தேர்தல் அறிக்கை குறித்துப் பேசுகையில், “எல்லா ஊர்களுக்கும் குழாய் மூலம் தண்ணீரே சென்று சேராத நிலையில், குழாய் மூலம் எரிவாயு எப்படிக் கொண்டு செல்ல முடியும். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதாக பாஜக அளித்துள்ள வாக்குறுதி மிகப்பெரிய வேடிக்கையான செயல் ஆகும். பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டிக்கொடுத்துவிட்டதாக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது பொய்க் கணக்கு ஆகும். அதாவது 4 கோடி வீடுகளை கட்டி இருந்தால் 52 ஆயிரம் வீடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டி இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் பாஜக அரசு கட்டிக்கொடுத்த 52 ஆயிரம் வீடுகளைக் காட்ட முடியுமா?. 

 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

நாடாளுமன்றத்தில் 33 சதவித மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி இருந்தாலும் அந்த சட்டம் இப்போதைக்கு அமலுக்கு வராது. பெண்களுக்கான 33 சதவித இட ஒதுக்கீட்டை வேண்டுமென்றே பாஜக ஒத்திப் போட்டுள்ளது. அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரயில் இயக்கப்படும் என்ற பாஜக வாக்குறுதி வேடிக்கையானது. ஒரு புல்லட் ரயிலுக்கு ரூ. 1.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ள பாஜக அரசு, போதிய ரயில் விபத்து தடுப்புக் கருவிகளைப் பொருத்தாதது ஏன்?.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஏற்கெனவே உள்ள ஒன்றுதான். பழைய பல்லவிகளைப் பாடுவது புதிய சிந்தனை அல்ல. பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை. நாட்டில் 5% பேர் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஏற்க முடியாது. பாஜக தேர்தல் அறிக்கையில் மக்களை ஏமாற்றும் தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன” எனத் தெரிவித்தார். 

Next Story

காரைக்குடியில் அமித்ஷாவின் ரோடு ஷோ திடீர் ரத்து!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Amit Shah's road show suddenly canceled in Karaikudi

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (12.04.2024) தமிழகம் வருகிறார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அமித்ஷாவின் பயணத்திட்டத்தின் படி நாளை சிவகங்கை மற்றும் மதுரையில் வாகனப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (13.04.2024) கன்னியாகுமரியில் பரப்புரையில் ஈடுபடுகிறார். இதனையடுத்து அன்று மாலை நாகப்பட்டினத்தில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும் தென்காசியில் நடைபெறும் வாகனப் பேரணியில் கலந்துகொள்கிறார். அதே சமயம் நாளை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்கிறார்.

இதன்படி சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் அமித்ஷா நாளை ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்த உள்ளார் என பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தேவநாதன் ரூ. 525 கோடி மோசடி செய்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டதும், சென்னையில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் நடத்திய ரோடு ஷோவுக்கு போதிய வரவேற்பு இல்லை என்ற விமர்சனமும் மக்கள் மத்தியில் எழுந்தது கவனிக்கத்தக்கது.