Skip to main content

காவல்துறையின் அலட்சியத்தால் இளம்பெண் வெட்டிக்கொலை;ரவுடி திருட்டுக்குமாரின் அட்டூழியம்

Published on 23/02/2019 | Edited on 23/02/2019

 

பாலியல் ரீதியாக இனங்க மறுத்த பெண்ணை திருட்டுக்குமார் என்பவன் கொலை செய்ததால் 3 வயது குழந்தை அனாதையான சம்பவம் வேளாங்கண்ணி பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.  காவல்துறையில் பாதுகாப்புக் கேட்டு கிடைக்காமல் போன சில தினங்களுக்குள் இந்த சம்பவம் நடந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் காவல்துறையின் மீது பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

 

s

 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகில் உள்ளது தெற்குபொய்கைநல்லூர் கிராமம். அங்கு  பூ கடைகளுக்கு பூ கட்டிக்கொடுத்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார் சரண்யா 28. அவரது 3 வயது குழந்தையோடு, கணவர் ஆனந்தவேலனோடு வசித்து வருகிறார்.  அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான திருட்டுகுமார் என்கிற கணேஷ்குமார் என்பவன் சரண்யாவுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளான்.  இதை சரண்யா தனது கனவரிடம் கூற, சரண்யாவின் கணவர் ஆனந்தவேலனுக்கும், திருட்டு குமாருக்கும் மோதல் ஏற்பட்டது. இது குறித்து காவல்துறையில் கூறியும் பயனில்லை. திருட்டு குமாருக்கு துணை போனது வேளாங்கண்ணி போலிசார். திருட்டுகுமாரிடம் ஒரு பொய் புகாரை பெற்றுக்கொண்டு சரண்யா கணவர் ஆனந்தவேலனை சிறையில் தள்ளினர். 

 

s

 

ஆனந்தவேலன் சிறையில் இருந்த சமயத்தில் திருட்டுகுமார் தொடர்ந்து சரண்யாவின் வீட்டிற்கு சென்று தகராறு செய்வதும், தொல்லைக்கொடுப்பதுமாக இருந்துள்ளான். யாருடைய ஆதரவும் இல்லாமல் தவித்த ஆனந்தவேலனின் தாயும் மனைவி சரண்யாவும் தனது குழந்தையுடன் சென்று வேளாங்கண்ணி காவல் நிலையத்தில்  மீண்டும் புகார் அளித்துள்ளனர்.  ஆனால் காவல்துறையினரோ வழக்கம் போலவே அலட்சியம் காட்டியுள்ளனர். அதோடு வேளாங்கண்ணி காவல்நிலையத்தில் உள்ள சுகந்தி, எட்வின் ஆகிய காவலர்களும் துப்பாக்கி எடுத்துவந்து உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கனுமா, என அலட்சியமாக கூறிவிட்டனர். 

 

s

 

 இந்த விவகாரத்தில்  தொடர்ந்து அலட்சியம் காட்டிவந்த காவல்துறை தனக்கு சாதகமாக இருந்ததை  சரியாக பயன்படுத்திக் கொண்ட திருட்டுக்குமார் இரவு அரிவாளுடன்  யாரும் இல்லாத சமயத்தில் சரண்யாவின் வீட்டிற்குள் நுழைந்துள்ளான். இதனை எதிர்பார்க்காத சரண்யா தனது 3 வயது மகனுடன் அலறி அடித்துக்கொண்டு வீதிகளில் உள்ள சந்துபொந்துகளில் ஓடியுள்ளார். அக்கம் பக்கத்தினர் யாரும் பயந்துகொண்டு காப்பாற்ற முன்வரவில்லை என்பதையும் சாதகமாக்கிக்கொண்டு, சரண்யாவை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தார் திருட்டுக்குமார்.  கொலை செய்துவிட்டு எங்கும் தப்பித்து செல்லாமல், துணிச்சலோடு தனது வீட்டிலேயே  சர்வ  சாதாரணமாக உட்காந்திருந்த ரவுடி திருட்டு குமாரை,   போலிசார் கைது செய்தனர்.

 

s

 

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் விசாரணை மேற்கொண்டார்.    அதோடு திருட்டுகுமார் மீது வேளாங்கண்ணி காவல்நிலையத்தில் மட்டும் 3 கொலை வழக்குகளும் பல  திருட்டு வழக்குகளும் இருக்கிறது.

 

பாதுகாப்பு கேட்டு புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காத காரணத்தால், மூன்று வயது மகனின் கண் முன்னே தாய் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாகையில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாகை - காங்கேசன் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Passenger ferry service between Nagai Kangesan again
கோப்புப்படம்

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி (14.10.2023) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்தசோனாவால், தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கப்பலின் பயணக் கட்டணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயுடன் 18 சதவிதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 7 ஆயிரத்து 670 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தச் சூழலில் முதல்நாளில் போதிய பயணிகள் வராததால், 75 சதவீத கட்டண சலுகையில் ரூ.2,375 ஜிஎஸ்டி 18 சதவீதம், ஸ்நாக்ஸ் என மொத்தமாக ரூ.2,803 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் இரண்டாம் நாளில் 7 பேர் மட்டுமே பயணம் செய்ய இருந்த நிலையில், கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் - காங்கேசன் துறைமுக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்திற்கு மூன்று நாட்கள் என மாற்றப்பட்டது. குறைந்த அளவில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதால் கப்பல் போக்குவரத்து சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு பிறகும் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் மழையைக் காரணம் காட்டி பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியுடன் (20.10.2018) நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. அந்தமானில் தயாரிக்கப்பட்ட ‘சிவகங்கை’ என்ற கப்பல் மே 13 ஆம் தேதி (13.05.2024) நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு தனது பயணத்தைத் தொடங்க உள்ளது. இதற்காக இந்தக் கப்பல் மே 10 ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வர உள்ளது. பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கப்பலின் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 5 ஆயிரமும், மேல் கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 7 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.