Skip to main content

நிதி நிறுவன மாடியில் மர்மமான முறையில் பெண் கொலை... கொலையாளியைத் தேடும் போலீஸ்...

Published on 02/01/2021 | Edited on 02/01/2021

 

Mysterious murder of a woman on the floor of a financial institution in cuddalore ..

 

கடலூர் மாவட்டம், புவனகிரி கடைவீதியில் தனியார் நிதிநிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தைத் திறப்பதற்காக நிறுவனத்தின் காவலாளி செந்தில்குமார் நேற்று காலை சென்றுள்ளார். அப்போது நிதி நிறுவனத்தில் மாடிப் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த செந்தில், அதுகுறித்து நிதி நிறுவன அதிகாரிகளுக்கும் காவல் துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். 

 

இதையடுத்து சிதம்பரம் டி.எஸ்.பி. லாமேக், புவனகிரி இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது நிறுவனத்தின் மாடிப்படி பகுதியில் நிர்வாணமான நிலையில் ஒரு பெண் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

போலீசாரின் தொடர் விசாரணையில் அந்த நிதி நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைப் போலீசார் சோதனை செய்தனர். அதில் அந்த நிறுவனத்தின் அருகில் உள்ள தனியார் கணினி மையத்தில் கணக்காளராக வேலை பார்த்துவரும் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள தச்சூர் சக்தி விளாகம் கிராமத்தைச் சேர்ந்த எழிலரசன் மகன் முரசொலிமாறன் (வயது 29), கடந்த 29ஆம் தேதி இரவு 7 மணி அளவில் ஒரு பெண்ணுடன் நிதி நிறுவனத்தின் மாடிப் பகுதிக்கு ஏறி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. 

 

இரவு 11 மணியளவில் முரசொலிமாறன் மட்டும் மாடியில் இருந்து தனியாக கீழே இறங்கி வந்த காட்சியும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதனால் போலீசாருக்கு முரசொலிமாறன் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரைப் பிடித்து விசாரணை செய்ய அவரைத் தேடிச் சென்றனர். ஆனால், முரசொலிமாறன் ஏற்கனவே தலைமறைவாகியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண்ணுக்கும் முரசொலிமாறனுக்கும்  என்ன தொடர்பு என்ற கோணத்தில் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். அதில், உயிரிழந்த பெண் புதுச்சேரி பகுதியில் உள்ள மதகடிப்பட்டு பி.எஸ். பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மனைவி சத்யா (வயது 35) என்பது தெரியவந்துள்ளது. 

 

ராஜேந்திரன், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் முரசொலிமாறன் புதுச்சேரியில் பணிபுரிந்தபோது சத்யாவுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. முரசொலிமாறன், புவனகிரி அருகில் உள்ள ஆயிபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து கொண்டு புவனகிரியில் உள்ள ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் கணினி இயக்குபவராக பணிபுரிந்து வருகிறார். அவ்வப்போது முரசொலிமாறனைச் சந்திப்பதற்கு புதுச்சேரியிலிருந்து சத்யா வருவதும், இருவரும் தனிமையில் சந்திப்பதும் நடந்துள்ளது. இந்நிலையில் தற்போது சத்யா கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முரசொலிமாறனை கைது செய்தால் மட்டுமே மேற்கொண்டு விபரங்கள் தெரியவரும் என்கிறார்கள் புவனகிரி போலீசார். பரபரப்பான புவனகிரி கடைவீதியில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்