Skip to main content

தூத்துக்குடியை பரபரப்பாக்கிய காதல் தம்பதி கொலை சம்பவம்; சிறுவன் உட்பட 4 பேர் கைது

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

n


காதல் திருமணம் செய்துகொண்ட மூன்றே நாளில் கணவன் மனைவியை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

தூத்துக்குடி முருகேசன் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வசந்தகுமாரின் மகன் மாரிசெல்வம்(22). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மாரிசெல்வமும் திருவிக நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கத்தின் மகள் கார்த்திகாவும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இதற்குப் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் கடந்த 30 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

 

இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மாரிசெல்வத்தின் வீட்டிற்கு வந்து கோபத்துடன் பேசிவிட்டுச் சென்றுள்ளனர். இந்த நிலையில்தான் நேற்று இரவு மாரிசெல்வம் வீட்டிற்குள் வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் காதல் திருமணம் செய்து கொண்ட இருவரையும் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றது. இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காதல் திருமணம் செய்து கொண்டதால், இருவரையும் பெண் வீட்டார் கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பொருளாதார ரீதியாக மாரிசெல்வம் பின்தங்கி இருந்ததால், திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கொலையை அரங்கேற்றியதாகத் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க போலீசார் மூன்று தனிப்படை அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் பெண்ணின் தந்தை முத்துராமலிங்கம் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த இசக்கி ராஜா, மாரியப்பன், ராஜபாண்டி, ஒரு சிறுவன் உட்பட  4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்