Skip to main content

முதல்வர் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா பலிகள்! 36 நாளில் 25 பேர் உயிரிழப்பு!!

Published on 20/07/2020 | Edited on 20/07/2020

 

corona


கரோனா நோய்த்தொற்று சமூகப்பரவலாகி வருகிறதா இல்லையா என்ற சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே கடந்த 36 நாள்களில் 25 பேர் நோய்த்தொற்றுக்கு பலியாகி இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் காய்ச்சல், கண் எரிச்சல், சளி போன்றவை கரோனா தொற்றின் அறிகுறிகள் எனச் சொல்லப்பட்டு வந்தன. அதன்பின்னர் அறிகுறிகள் இல்லாமலேயே இவ்வகை நோய்த்தொற்று உருவாகும் என்றனர்.


கரோனா பற்றிய ஆராய்ச்சியில் அடுத்தக்கட்டமாக இது காற்று மூலமும் பரவும் தன்மையுடையது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இப்போதைக்கு சமூக இடைவெளியும், முகக்கவசம் அணிதல் மட்டுமே கரோனாவில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான ஒரே வழிமுறையென தமிழக அரசும் வலியுறுத்தி வருகிறது.


இதற்கிடையே, நோய்த்தொற்றால் இறப்போர் எண்ணிக்கையும் கடந்த ஒரு மாதத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஜூலை 19ஆம் தேதி வரை 2,481 பேர் கரோனா நோய்த்தொற்றால் இறந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 78 பேர் இறந்துள்ளனர்.


சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை ஊரடங்கு தொடங்கிய மார்ச் முதல் ஜூன் முதல் வாரம் வரை நோயின் தாக்கமும் ஓரளவு கட்டுக்குள் இருந்தது. அத்துடன், கரோனாவால் பலியும் இல்லாமல் இருந்தது.


இந்நிலையில், முதன் முதலில் சேலம் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் ஒருவரின் 45 வயதான மனைவி, கடந்த ஜூன் 13ஆம் தேதி கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானார். 


ஜூலை 19, 2020ம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் மட்டும் 25 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். 


சேலம் குமாரசாமிப்பட்டியைச் சேர்ந்த 62 வயது பெண் ஒருவருக்கு, கடந்த வாரம் கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. அதையடுத்து, அவர் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். அவருடன் சேர்த்து மாவட்டம் முழுவதும் இதுவரை 25 பேர் கரோனாவால்  இறந்துள்ளனர்.


இறந்தவர்களில் பெரும்பாலானோருக்கு கரோனா தொற்று மற்றுமின்றி நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், சுவாசக்கோளாறுகள், இருதய நோய், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட வேறு பல நோய்களும் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பெரும்பாலும் சர்க்கரை வியாதியால் அவதிப்படுபவர்கள், கரோனா தொற்றால் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் அதிக ரிஸ்க் இருப்பது இறந்தோரின் பின்னணியை ஆராயும்போது தெரிய வருகிறது.


சேலம் மாவட்டத்தில் இதுவரை 2,295 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தவிர, வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 326 பேருக்கும் இந்நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து 1,840 பேர் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். தற்போது 721 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 

 

http://onelink.to/nknapp


மாவட்டம் முழுவதும் கரோனா சளி தடவல் பரிசோதனைகள் 78,312 பேருக்கு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் மாவட்டம் முழுவதும் 1,208 பேருக்கு சளி தடவல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளன.


முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலேயே கரோனா தொற்றுக்கு 36 நாளில் 25 பேர் பலியாகி இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும், மாவட்ட நிர்வாகம் தரப்பில், கரோனாவால் இதுவரை 18 பேர் மட்டுமே இறந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
south indian artistes assoociation thanked tn government for new film city

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் கடந்த 19 ஆம் தேதி 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் சென்னை பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம் அமைப்பதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.  

தமிழக அரசு அறிவிப்பிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அதில், “சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தமிழ்த் திரைத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான திரைப்பட நகரம் குறித்த அறிவிப்பில், சென்னையை ஒட்டி பூந்தமல்லியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் வி.எப்.எக்ஸ். அனிமேஷன் மற்றும் எல்.இ.டி கன்வர்ஷன் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்பு தளங்கள், புரொடக்சன் பணிகள் பிரிவு, 5 நட்சத்திர ஓட்டல் வசதிகளுடன் கூடிய கட்டமைப்புகள் மற்றும் சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய சமூக கட்டமைப்பு வசதிகளுடன் திறந்தவெளி திரையரங்கம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது

தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் குறிப்பாகப் பெரிய படங்களின் படப்பிடிப்புகள் அண்டை மாநிலங்களில் நடப்பதால் இங்குள்ள நடிகர்கள் குறிப்பாகத் திரையுலக தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் குறைந்தன. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் நலம் வளம் பெறும். ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரும் சினிமா நகரமாக திகழ்ந்து, வரலாறு படைத்திட்ட நகரமிது. காலத்தில் கரைந்து போன அச்சரித்திரத்தை மீட்டெடுக்கும் திட்டமிது. தமிழ்த் திரைப்படங்களை உலக வரைபடத்தில் அழுத்தமாக பதிவதற்கு ஊக்கம் தந்து, படைப்பாளிகளின் கனவுலகத்தை மேலும் விரியச் செய்கின்ற திட்டமிது. தமிழ்த் திரையுலகின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்; அமைச்சரின் கோரிக்கையை ஏற்க மறுத்த ‘ஜாக்டோ - ஜியோ’

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Indefinite strike; Jacto refused to accept the minister's request - Geo

திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என  ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், தமிழக அரசு போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை வைத்திருந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி முதல் 'ஜாக்டோ ஜியோ' ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ. வேலு, ஜாக்டோ ஜியோ சங்க உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை வைத்திருந்தார். அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், 'கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு ஊழியர்களின் தேவைக்கேற்ப பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதிநிலைக்கு ஏற்ப அரசு பணிவுடன் பரிசீலிக்கும்.

கலைஞர் வழி நடக்கும் அரசு, ஊழியர்களின் நலனை எப்போதுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அரும்பணியை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களின் முக்கியத்துவத்தை அரசு உணர்ந்தே இருக்கிறது. எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டு அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அரசுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜாக்டோ ஜியோ தரப்பிலிருந்து, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரிப்பதாகவும், தங்களின் கோரிக்கையை உடனடியாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் எனவும் நாளை மறுநாள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்றும் பிப்ரவரி 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கும் என்று ‘ஜாக்டோ ஜியோ’ அறிவித்துள்ளது.