Skip to main content

கழிப்பறை மேற்கூரை விழுந்த வழக்கில் நகராட்சி இழப்பீடு வழங்க உத்தரவு..!

Published on 27/04/2021 | Edited on 27/04/2021
Municipal order to pay compensation in case of toilet roof collapse

 

கடந்த 2018 ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி இரவில் மழை பெய்துகொண்டிருந்தது. இந்நிலையில், பல்லடம் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்ற அசோக்குமார் என்பவர் மீது மேற்கூரை இடிந்து விழுந்தள்ளது. அதில் அவர் பலியானார். 

நகராட்சி நிர்வாகம் கழிப்பறையை முறையாக பராமரிக்காததே கணவரின் மரணத்திற்கு காரணம் என்றும், கொத்தனார் வேலை செய்து வந்த அவரின் மரணத்திற்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி அவர் மனைவி சரஸ்வதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் எம்.புருஷோத்தமன், தமிழக அரசு, திருப்பூர் ஆட்சியர், பல்லடம் நகராட்சி ஆகியோர் தரப்பில் எஸ்.கமலேஷ் கண்ணன், பி.ஆனந்த்,  ஏ.எஸ்.தம்புசாமி, பாலரமேஷ் ஆகியோர் ஆஜரானார்கள். தமிழக அரசு மற்றும் பல்லடம் நகராட்சி தரப்பில், கட்டிடம் கட்டப்பட்டு 30 ஆண்டுகள் ஆனாலும், உறுதியாக இருப்பதாக அதை ஆய்வு செய்த அதிகாரிகள் அறிக்கை அளித்து இருப்பதால், மேற்கூரை இடிந்து விழுந்ததற்கு நகராட்சி பொறுப்பாகாது என்றும் தெரிவிக்கப்பட்டது. 

 

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், கட்டிடத் தொழிலாளி அசோக்குமாரின் மரணத்திற்கு நகராட்சி அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம் என்பதை சுட்டிக்காட்டி, அவரது மரணத்திற்கு இழப்பீடு வழங்க பல்லடம் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளனர். அதன்படி 27 லட்ச ரூபாய் இழப்பீட்டை நிர்ணயித்த நீதிபதிகள், அதில் 10 லட்ச ரூபாயை  மனைவி சரஸ்வதிக்கும், தலா 5 லட்ச ரூபாயை இரு மகள்கள் மற்றும் மகனுக்கும், 2 லட்ச ரூபாயை அசோக்குமாரின் தாயாருக்கும் 8 வாரத்திற்குள் வழங்க வேண்டுமென பல்லடம் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். இழப்பீடு வழங்கப்பட்டது தொடர்பான அறிக்கையை ஜூன் 21-ஆம் தேதி தாக்கல் செய்யவும் அரசு உத்தரவிட்டு உள்ளனர். உலகில் மழையின்றி உயிர் வாழ முடியாது என்றாலும், விலைமதிப்பில்லாத ஒரு உயிர் மழையால் பறிபோயுள்ளதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.