தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பலர் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்குகள் பதிவாகிவருகின்றன. அதேபோல், வெகுகாலமாக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பெயர்களைச் சொல்லி அவர்கள் மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறி பண மோசடி செய்யும் கும்பல்கள் மீதும் வழக்குகள் பதிவாகி வருகின்றன.
இந்நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக சொல்லி அதிமுகவைச் சேர்ந்த மூவர் பெண் ஒருவரிடம் பல லட்சங்களை வாங்கி ஏமாற்றியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி ஐ.ஜி. அலுவலகத்தில் அப்பெண், தனது கணவர் மற்றும் அவர்களின் கைக்குழந்தையுடன் வந்து புகார் மனு கொடுத்துள்ளார்.
திருச்சி திருவெறும்பூரைச் சேர்ந்த ஜெனிபர் மற்றும் அவரது கணவர் பிரசாத் இருவரும் இன்று திருச்சி ஐ.ஜி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், ‘திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் கிருஷ்ண சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த லாசர், சூரியூரைச் சேர்ந்த சுப்பிரமணியன், தேனீர் பட்டியைச் சேர்ந்த வீரமணி உள்ளிட்ட மூன்று பேர் அரசு செவிலியர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 4 லட்சம் வாங்கி மோசடி செய்துவிட்டனர். இது குறித்து அளித்தப் புகாரில் ஏற்கனவே, லாசர் மீது மட்டும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மீதமுள்ள இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் கொடுத்த பணத்தை மீட்டுத்தர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.