Skip to main content

“அமைச்சரை மாற்றியதற்கு பதிலாக மோடி பதவி விலகியிருக்க வேண்டும்” - கே.எஸ். அழகிரி பேட்டி! 

Published on 09/07/2021 | Edited on 09/07/2021

 

"Modi should have resigned instead of changing the minister" - KS Alagiri interview

 

மத்திய  அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தமிழ்நாடு அளவில் ஆங்காங்கே பெரும் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். அதனடிப்படையில் விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் இதற்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்தும் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்துகொண்ட பெருந்திரள் ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் சீனிவாசன் குமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, கட்சி நிர்வாகிகள் செல்வராஜ், ராஜ்குமார், லதா பீட்டர் ராமமூர்த்தி, தயானந்தன், ஸ்ரீராம், சதீஷ் பிரபாகரன், வளவனூர் அண்ணாமலை உட்பட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி, “பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் மீது செயற்கையான ஒரு விலையேற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் பிரதமர் மோடி. பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனை செய்வதால், சாதாரண கருவேப்பிலை கூட விலை ஏறுகிறது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை நூற்றியெட்டு டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 70 ரூபாய் என விற்பனை செய்தோம். மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும் என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லோரும் நமது சகோதரர்கள் என்று கருதி காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தது.

 

ஆனால் இன்றைக்கு மோடி அரசு மக்களை மதரீதியாக சாதி ரீதியாக பிரிக்கின்றது. ஏழை எளிய அடித்தட்டு மக்கள் படித்து முன்னுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக நீட் போன்ற தேர்வை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. பாஜக அரசு மக்களை அறிவு ரீதியாகவும் பிரிக்கிறது. உயர்ந்த அறிவு உள்ளவர்கள்தான் மருத்துவராக வர வேண்டும் என்கிறார்கள். அவர்கள் சமூகத்தின் அடித்தட்டில் மாற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பெட்ரோல், டீசல் விலையைப் பொருத்தவரை இன்று உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் ரூபாய் 50 டாலருக்கும் கீழ் குறைந்துவிட்டது. அதனால் பெட்ரோல், டீசல் விலை 35 ரூபாய்க்கு விற்க வேண்டும். ஆனால், 100 ரூபாயைக் கடந்து விற்பனை செய்கிறார்கள். அதற்கு என்ன காரணம்? பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை அதிகமாக விதிக்கிறார்கள். அதைப் பொதுமக்கள் தலையில் சுமத்துகிறார்கள்.

 

இந்தக் காரணத்தினால்தான் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்ந்துகொண்டே போகிறது. இதனால் அனைத்துப் பொருட்களும் விலை ஏறுகின்றன. ஏழை எளியமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனைத் தமிழக காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்த விலையேற்றத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டக் கூடாது என்பதுதான் கோட்பாடு. காங்கிரஸ் கட்சியும் அதனை வலியுறுத்துகிறது. காவிரியாக இருந்தாலும் வேறு எந்த நதியாக இருந்தாலும் அந்த தண்ணீர் ஒரு மாநிலத்திற்கு சொந்தமானது கிடையாது. ஒரு மாநிலத்தில் உற்பத்தியாகி வரும்போது அதில் அவர்களுக்கு அதில் பங்கு உண்டே தவிர, அந்த நதியை அவர்கள் சொந்தமாக்கிக்கொள்ள முடியாது. பல ஆண்டுகளாக காவிரி நீரை நாம் பயன்படுத்திவருகிறோம். கங்கை நதி சீனா, பாகிஸ்தான் நாடுகளுக்கும் செல்கிறது. தற்போது மேகதாது அணை கட்டுவது குறித்து தமிழக அரசின் ஒப்புதல் ஆலோசனைகளையும் பெறவில்லை. இதுகுறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஒன்றிய அமைச்சரை சந்தித்து பேசியுள்ளார். ஒன்றிய அமைச்சரவை மாற்றத்தால் எந்தப் பலனும் கிடைக்காது. சுகாதாரத்துறை அமைச்சரை மாற்றியதற்குப் பதிலாக பிரதமர் மோடி பதவி விலகியிருக்க வேண்டும்” இவ்வாறு பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.