சேலத்தில், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த மூன்று ரவுடிகளை ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் மாநகர காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.
சேலம் பள்ளப்பட்டி சின்னேரி வயல்காடு பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (35), ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டியைச் சேர்ந்த குமார் (35), சேலம் ஜான்சன்பேட்டையைச் சேர்ந்த கண்ணாங்காடு சுரேந்தர் என்ற கோபி (23) ஆகிய மூன்று பேரை மாநகர காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 22) குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இவர்களில் பாண்டியன், குமார் ஆகிய இருவரும் கூட்டாளிகளுடன் சேர்ந்து சூரமங்கலம், தீவட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் 3 வீடுகளில் பூட்டை உடைத்து 18 பவுன் நகைகள், 1.45 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடியுள்ளனர். ஓமலூர் பகுதியிலும் ஒரு வீட்டில் புகுந்து 47 பவுன் நகைகள் திருடியுள்ளனர்.
மேலும், சேலம் அங்கம்மாள் காலனியைச் சேர்ந்த அரவிந்த் என்பவரை கத்தியைக் காட்டி மிரட்டி 2 ஆயிரம் ரூபாய் பணம் பறித்த வழக்கில் கடைசியாக கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் பாண்டியன் ஏற்கனவே 8 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். தற்போது 9வது முறையாக குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கைதானவர்களில் கண்ணாங்காடு சுரேந்தர், திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார். மோகன்ராஜ் என்பவரை கத்தி முனையில் மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்துச்சென்ற வழக்கிலும் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து வருவதால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல்துறை துணை ஆணையர் மாடசாமி மற்றும் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததன் பேரில், காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி மூவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவருக்கும் குண்டர் சட்ட கைது ஆணை நேரில் வழங்கப்பட்டது.