Skip to main content

சிறுமி பலியானதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை - மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

Published on 18/11/2022 | Edited on 18/11/2022

 

Killanur Village people who participated in the road blockade

 

புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 14 ஆம் தேதி ஒரு ஆட்டோவில் வந்த கும்பல் சாலையோரம் உள்ள கோயில்களிலிருந்த பாத்திரங்கள் உட்பட பல பொருள்களையும் திருடிக்கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தப்பிச் சென்ற கும்பலைப் பிடிக்க சுமார் 20 கி.மீ தூரத்திற்கு மோட்டார் சைக்கிள்களில் விரட்டிச் சென்றனர்.

 

ஏராளமான இளைஞர்கள் தங்களை விரட்டி வருவதைப் பார்த்த ஆட்டோவில் சென்ற கும்பல் இளைஞர்களிடம் இருந்து தப்பிக்க தாங்கள் திருடிய  கோயில் பொருட்களைச் சாலை ஓரங்களில் வீசிக்கொண்டே சென்றனர். பொருட்கள் கிடைத்துவிட்டால் தங்களை பின் தொடர மாட்டார்கள் என்பதால் பாத்திரங்களை வீசியுள்ளனர். ஆனால் தொடர்ந்து விரட்டிய இளைஞர்கள் புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் வைத்து ஆட்டோவை மடக்கி பிடித்தனர்.

 

அப்போது அந்த ஆட்டோவில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சக்தி நாராயணசாமி மற்றும் அவரது மனைவி லில்லி புஷ்பா,  அவர்களின் மகன்கள் விக்னேஸ்வர சாமி, சுப மெய்யசாமி, மகள்களான சிறுமிகள் ஆதிலெட்சுமி, கற்பகாம்பிகா ஆகிய 6 பேர் இருந்துள்ளனர். ஆட்டோவில் கோயிலில் திருடிய கொஞ்சம் பொருட்களும் இருந்துள்ளது.  அப்போது கோயில் பாத்திரங்களைத் திருடிக்கொண்டு ஆட்டோவில் தப்பிய கும்பலைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் சிறுமி ஆதிலட்சுமியை தவிர மற்றவர்கள் காயமடைந்துள்ளனர். இதில் கற்பகாம்பிகா பலத்த காயமடைந்துள்ளார்.

 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 6 பேரையும் மீட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிறுமி ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் புதன்கிழமை மாலை சிறுமி கற்பகாம்பிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கோயிலில் திருடிச் சென்றவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் அடையாளம் தெரியாத கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 6 இளைஞர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இந்த தகவல் அறிந்த அண்டக்குளம் பகுதி கிராம மக்கள் சிறுமி உயிரிழப்பிற்கு திருடர்களை விரட்டிச் சென்று பிடித்தவர்கள் காரணமில்லை. அதனால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களை உடனே வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று அண்டக்குளத்தில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்