Skip to main content

ரத்த தானம் செய்ய அழைத்து இளைஞரிடம் கிட்னி திருட்டு! - மதுரையில் பரபரப்பு!

Published on 10/07/2018 | Edited on 10/07/2018
stu


ரத்த தானம் செய்வதற்காக அழைத்து தனியார் மருத்துவமனையில் இளைஞரிடம் இருந்து கிட்னியை நூதனமாக திருடியுள்ள சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை எஸ்.பி அலுவலகத்தில் நேற்று வந்த ஒரு பெண், தனது மகனின் கிட்னியை தனியார் மருத்துவமனை நூதனமாக திருடிவிட்டதாக எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார். அப்போது, அதை கேட்ட எஸ்.பி உள்ளிட்ட போலீசார் பெரும் அதிர்ச்சியைடைந்தனர். இதுகுறித்து அவர் அளித்துள்ள புகார் மனுவில்,

மதுரை ஒத்தக்கடையை சேர்ந்தவர் ஷகீலா. இவரது மகன் முகம்மது பக்ருதீன் (18). ‘‘மதுரை அருகே கொட்டாம்பட்டியை சேர்ந்த உறவினர் ராஜா முகம்மது, பஷீர் அகமது என்பவருடன், 2017, அக்டோபர் மாதம் எனது வீட்டிற்கு வந்தார்.

 

 

அப்போது, பஷீர் அகமதின் மகன் அசாருதீனுக்கு ரத்தம் தேவைப்படுவதாக கூறி, எனது மகன் முகம்மது பக்ருதீனை மதுரை வளர்நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். திடீரென எனது மகனின் ரத்தத்தில் கிருமி இருப்பதாக கூறி, சிகிச்சை அளிக்க வேண்டுமென தெரிவித்தனர். இதற்கு என்னிடமும் கையெழுத்து பெற்றுக்கொண்டு, ஒரு மாதம் மருத்துவமனையில் தங்க வைத்தனர்.

அந்த சமயத்தில், எனது மகனின் இடதுபுற கிட்னியை எடுத்து அசாருதீனுக்கு பொருத்தியுள்ளனர். இது எங்களுக்கு தெரியவில்லை. ஒரு மாதத்திற்கு பிறகு வீடு திரும்பிய எனது மகன் பக்ருதீன் நடக்கமுடியாமல், உடல் சோர்வான நிலையில் காணப்பட்டார். இதைத்தொடர்ந்து சந்தேகத்தில் வேறு மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தோம்.

அப்போது, பக்ருதீனின் கிட்னி எடுக்கப்பட்டிருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தோம். உடனடியாக உறவினர் ராஜா முகம்மது மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் இதுகுறித்து கேட்டபோது, அவர்கள் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதையடுத்து, சம்பவம் குறித்து மேலூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராஜமுகம்மது தரப்பினருக்கு ஆதரவாக மேலூர் காவல்நிலைய போலீஸ் செயல்பட்டது என அவர் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சம்பவம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க மேலூர் சரக டிஎஸ்பிக்கு உத்தரவிட்டுள்ளதாக மதுரை எஸ்பி மணிவண்ணன் ஷகீலாவிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்