Skip to main content

பணியில் இல்லாத மருத்துவர்; தாய் மற்றும் சேய்க்கு நிகழ்ந்த சோகம்

Published on 21/01/2023 | Edited on 21/01/2023

 

kallakurichi kalvarayan hills child incident 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாழ்கிறார்கள். இன்னும் இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவு பெறாத நிலையில் உள்ளது. இந்நிலையில், மலையில் உள்ள ஆலனூர் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் மனைவி மல்லிகா (வயது 24). கூலித் தொழிலாளிகளான இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் மல்லிகா கருவுற்றார்.

 

இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான மல்லிகாவுக்கு நேற்று முன்தினம் மாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரது உறவினர்கள் அவரை உடனடியாக சேராப்பட்டு அரசு சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில், இரவு சுமார் 8 மணியளவில் மல்லிகாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த 10 நிமிடங்களில் குழந்தை இறந்துபோனது. பிரசவித்த தாய் மல்லிகாவிற்கு ரத்தப்போக்கு அதிகரித்துள்ளது. அங்கு பணியில் இருந்த செவிலியர்கள் மல்லிகாவின் உறவினர்களிடம் ரத்தப்போக்கை நிறுத்துவதற்கு கிளாங்காடு சுகாதார நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து மருந்து வாங்கி வரும்படி கூறியுள்ளனர். அவர்களும் கிளாங்காடு சுகாதார நிலையம் சென்று மருந்து வாங்கி வந்தனர். அதற்குள் இரவு 9.30 மணியளவில் ரத்தப்போக்கு காரணமாக மல்லிகாவும் உயிரிழந்துவிட்டார்.

 

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த செவிலியர்கள் மல்லிகாவின் உறவினர்களை சுகாதார நிலையத்தை விட்டு வெளியே அனுப்பிவிட்டு மருத்துவமனை கதவை உள்புறம் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டனர். அன்று அதிகாலை 1 மணியளவில் அந்த சுகாதார நிலையத்தின் பணி மருத்துவர் அங்கு வந்துள்ளார். சிகிச்சைக்கு வராத மருத்துவர் குழந்தையும் தாயும் இறந்த பிறகு வந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த மல்லிகாவின் உறவினர்கள் அங்கிருந்த டேபிள், சேர், டிவி உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். அதோடு மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

 

இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ரமேஷ், கச்சராபாளையம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த சேராப்பட்டு பகுதிக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தாயும் குழந்தையும் உயிரிழக்கக் காரணமான பணி மருத்துவர், பிரசவம் பார்த்த செவிலியர் ஆகியோரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கோட்டாட்சியர் பவித்ரா மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டனர். இதனால் சேராப்பட்டு - மூலக்காடு பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கரியாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.