
சென்னையில் போதைப்பொருள் கடத்திய பெண் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து இத்தாலி ரக துப்பாக்கி, 15 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் அலி, உசேன் முகமது அலி, புதுக்கோட்டை முகமது அசார், மீனா என்ற பெண் உள்ளிட்ட ஆறு பேரும் ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 700 கிராம் என்ற உயர்ரக போதைப்பொருளான மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஆறு பேரில் ஒருவரிடம் இருந்து இத்தாலி மேட் துப்பாக்கி மற்றும் 15 தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.
இத்தாலி துப்பாக்கியானது மீனா என்ற பெண்ணின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. விசாரணையில் மணிப்பூரிலிருந்து போதைப்பொருளை கடத்தி வந்து சென்னையில் பல்வேறு பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதற்குப் பின்புலமாக யார் யார் உள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையாகவே சென்னையில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் பிடிபட்டு வரும் நிலையில் போதைப் பொருளுடன் ஆயுதம் வைத்திருந்த கும்பல் பிடிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.