சென்னை மாநகர பேருந்தில் ரீல்ஸ் எடுத்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வடபழனி பணிமனைக்கு உட்பட்ட சென்னை மாநகர பேருந்தில் ஒப்பந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனராக பணியாற்றி வந்த இருவர் பேருந்தை இயக்கி கொண்டு ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்துள்ளனர். மேலும் அதனை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். அதே சமயம் அரசு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் இத்தகைய செயல் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் மாநகரப் பேருந்தில் ரீல்ஸ் எடுத்து பதிவிட்ட ஒப்பந்த பணியாளர்களான ஓட்டுநர், நடத்துநர் என இருவரையும் பணிநீக்கம் செய்ய சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திற்கு மாநகர் போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக பணியின் போது ஊழியர்கள் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.