
'புரெவி' புயல் காரணமாக, தமிழகத்தின் பல இடங்களில் தொடர்ந்து மழை பொழிந்து வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. சென்னை, கடலூர் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.
இந்நிலையில், காஞ்சிபுரம் களக்காட்டூரில் உள்ள அரசு வேளாண் விரிவாக்க மையத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிய வந்தவர் மாற்றுத் திறனாளி பெண்ணான சரண்யா. அந்த அலுவகத்தில் கழிப்பிட வசதி இல்லாத நிலையில், மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குரூப் தேர்வு மூலம் பணியில் சேர்ந்த சரண்யா, ஏற்கனவே அலுவகத்தில் கழிப்பறை வசதி இல்லை என்பதால் தான் வேலைக்குப் போக விருப்பமில்லை எனவும் கூறிவந்துள்ளார். ஆனால், அரசாங்க வேலை என்பதால் போக வேண்டும் எனப் பெற்றோர்கள் கூறியதை அடுத்து வேலைக்குச் சென்றுவந்துள்ளார் சரண்யா.
இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்துவரும் சூழலில், தவிர்க்க முடியாத நிலையில், சரிவர பராமரிக்கப்படாத கழிவறையைப் பயன்படுத்தச் சென்றுள்ளார் சரண்யா. அங்குள்ள, செப்டிக் டேங் மீது வெறும் ஓட்டை வைத்து மறைத்துள்ளனர். இந்நிலையில், மழைநீர் தேங்கியிருந்ததால் தெரியாமல் ஓட்டின் மீது காலை வைத்த சரண்யா, கழிவுநீர்த் தொட்டியில் விழுந்துள்ளார். வெகுநேரம் ஆகியும் அந்தப் பெண்மணி வராததால், ஊழியர்கள் சென்று பார்க்கையில், அவர் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்தது கண்டு அதிர்ச்சியுற்று, அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளனர்.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்பட்ட சரண்யா ஆட்டோ மூலமாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.