Skip to main content

திருமணம் மீறிய உறவு; கணவன் கொடூரக் கொலை; மனைவியுடன் இளைஞர் கைது

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

improper liaison; Youth arrested with wife

 

திருமணம் மீறிய உறவின் காரணமாக மனைவியே கட்டிய கணவனைக் கொன்றிருப்பது தென்காசி மாவட்டத்தின் புளியங்குடி நகரையே பதைபதைக்க வைத்திருக்கிறது.

 

ஆளரவமற்ற புளியங்குடி நகரின் நவாப் சாலை அன்றைக்குப் பரபரப்பாக காணப்பட்டது. மக்களின் கூட்டம் அரக்கப்பறக்க திரண்டிருந்தது. காரணம், சாலையின் ஓரமாக நடுத்தர வயதுடைய ஒருவர் தலை, கழுத்துப் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த தகவல் புளியங்குடி காவல் நிலையம் வரை போக, புளியங்குடி டி.எஸ்.பி. அசோக், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடலைக் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி விசாரணையை மேற்கொண்டனர்.

 

உயிரிழந்து கிடந்தவர் அருகிலுள்ள வாசுதேவநல்லூரிலிருக்கும் ஒரு ஹோட்டல் ஒன்றில் வடை மாஸ்டராக பணியிலிருக்கும் மாரியப்பன் என்பது தெரிய வந்தது. நேற்று முன்தினம் அதிகாலை தன் மனைவி கனகாவிடம் இரு சக்கர வாகனத்திற்குப் பெட்ரோல் போட்டுவிட்டு வருவதாகச் சொல்லிச் சென்ற மாரியப்பன் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ள நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், மாரியப்பன் கனகா தம்பதியரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருகிற உறவினரான திருமணமாகாத விக்னேஷ் என்ற இளைஞனை சந்தேகத்தின் பேரில் கஷ்டடிக்குக் கொண்டு வந்து விசாரித்த போலீசாரிடம்,  நடந்தவற்றை விவரித்திருக்கிறார் விக்னேஷ்.

 

மாரியப்பன் கனகா தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். பல ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்துடன் கேரளாவுக்கு இடம் பெயர்ந்தவர்கள் அங்குள்ள ஓட்டலில் வேலை பார்த்திருக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் வாசுதேவநல்லூருக்கு வந்திருக்கிறார்கள். மனநலம் சார்ந்த பிரச்சனையில் இருந்த மாரியப்பன், மனநோய் தாக்கம் குறித்து சிகிச்சையும் மேற்கொண்டிருக்கிறார்.

 

improper liaison; Youth arrested with wife

 

இந்த சூழலில்தான், வாலிபர் விக்னேஷுக்கு மாரியப்பனின் மனைவி கனகாவுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணம் மீறிய உறவாக மாறியுள்ளது. இது உறவினர்கள் மூலம் கணவர் மாரியப்பனுக்குத் தெரிய வந்திருக்கிறது.

 

இதனால் ஆத்திரமான மாரியப்பன், மனைவி மற்றும் விக்னேஷையும் கண்டித்துள்ளார். தான் கடனாக விக்னேசுக்குக் கொடுத்த 6 லட்சத்தைத் திரும்பிக் கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ், தனது தொடர்புக்கு தடையாக இருக்கிற மாரியப்பனைக் கொலை செய்கிற கொடூர முடிவுக்கு வந்திருக்கிறார். மனைவி கனகாவும் அவனது திட்டத்திற்கு ஒத்துப் போயிருக்கிறார்.

 

இவர்களின் கொடூர திட்டத்திற்கு வாய்ப்பாக அக்.13 அன்று விடிவதற்கு சற்று முன்னதாக வீட்டை விட்டுப் புறப்பட்ட மாரியப்பன், தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுவிட்டு வருவதாக மனைவியிடம் சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார். உடனே தகவலைத் தனது செல்போன் மூலம் விக்னேஷிடம் தெரிவித்திருக்கிறார் கனகா. சற்றும் தாமதிக்காமல் விக்னேஷ் மாரியப்பனைத் தொடர்பு கொண்டு புளியங்குடியிலுள்ள ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துத் தருகிறேன். தனக்கு பணம் கிடைத்திருக்கிறது. தனக்கு கொடுத்த பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு செல்போன் மூலம் சொல்லியிருக்கிறார்.

 

இதனை நம்பிய மாரியப்பன் பைக்கில் செல்ல, அவரைப் பின் தொடர்ந்து மற்றொரு பைக்கில் சென்ற பால் வியாபாரி விக்னேஷ், புளியங்குடியின் ஆளரவமற்ற நவாப் சாலையில் செல்கிறபோது மாரியப்பன் பைக் மீது மோத அவரது பைக் துண்டாகப் போய் விழுந்திருக்கிறது. அப்போது அவரை எழுந்திருக்க விடாமல், விக்னேஷ் தான் கொண்டு வந்த இரும்புக் கம்பியால் மாரியப்பனைத் தாக்கியதுடன் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததை விசாரணையின் போது விக்னேஷ் தெரிவித்ததாக சரக காவல் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

 

தற்போது பால் வியாபாரி விக்னேஷ், கொலைக்குத் துணை போன கனகா இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை சிவகிரி நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்து சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.