
தனது கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கிய முதலமைச்சருக்கு மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் தென்காசி மாவட்டம் திப்பனம்பட்டி அருகே உள்ள வினைதீர்த்த நாடார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு பயிலும் மாணவி முதல்வருக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், தங்கள் பள்ளியில் உள்ள கட்டடத்தில் இடவசதி இல்லை. பள்ளியின் கட்டடத்தை மேம்படுத்தித் தரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், தென்காசிக்கு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்குச் சென்ற முதல்வர் மேடையில் பேசுகையில், “வினைதீர்த்த நாடார்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் ஆராதனா என்ற மாணவி எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அக்கடிதத்தில், தான் படிக்கும் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டித் தரவேண்டும் எனக் கேட்டிருந்தார். அதைப் படித்ததும் எனக்குப் பெருமையாக இருந்தது. எத்தகைய நம்பிக்கையை அவர் என் மீது வைத்திருந்தால் அவர் இக்கடிதத்தை எனக்கு எழுதி இருப்பார் என நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன்.
ஆராதனாவின் கோரிக்கை ஏற்கப்பட்டது என்பதை இக்கூட்டத்தில் நான் தெரிவிக்கிறேன். அதற்கு முதற்கட்டமாக 35 லட்சத்து 50 ஆயிரம் செலவிலே இரண்டு வகுப்பறைகள் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். இவ்வளவு சிறு வயதில் நம்பிக்கையுடன் எனக்கு கடிதம் எழுதிய ஆராதனா அதே பள்ளியில் படித்து எதிர்காலத்தில் சிறப்பான நிலையை அடைய வேண்டும் என அந்தச் சிறுமியை வாழ்த்துகிறேன்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், தன் கோரிக்கையை ஏற்று அதற்கான நிதியையும் ஒதுக்கிய முதல்வருக்கு மாணவி ஆராதனா நன்றிக்கடிதம் எழுதியுள்ளார். அதில், நீங்கள் கூறியது போல் இதே பள்ளியில் படித்து பெரிய ஆளாக வருவேன். அப்போதும் நீங்களே முதல்வராக இருக்க வேண்டும் என்றும் உங்களை நேரில் சந்தித்து நன்றி கூற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.