Skip to main content

ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பு... டெல்டா மாவட்டங்களில் வலுக்கும் போராட்டம்! 

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த 2017- ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 15- ஆம் தேதி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து அடுத்த நாளில் நெடுவாசலில் விவசாயிகள், மாணவர்கள் தொடங்கி போராட்டம் தொடர்ந்து இரண்டு கட்டமாக 197 நாட்கள் நடந்தது. 


நெடுவாசல் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், மாணவர்கள், திரைத்துறையினர் என பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து போராட்டங்களில் கலந்து கொண்டனர். போராட்டம் தொடர்ந்ததால் மத்திய, மாநில அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மக்கள் விரும்பாத திட்டத்தை செயல்படுத்தமாட்டோம் என்று உறுதி அளித்தனர். 


மக்கள் விரும்பாத திட்டத்தை செயல்படுத்தமாட்டோம் என்று அறிவித்தாலும் அடுத்த சில நாட்களில் ஜெம் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்தனர். ஆனால் ஜெம் நிறுவனம் போராட்டத்தைப் பார்த்து பயந்தே நெடுவாசல் பக்கம் தலைவைத்துக் கூட படுக்கவில்லை.

hydro carbon projects union government announced delta farmers


மேலும் டெல்டா மாவட்டங்களில் சுமார் 340 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துடன் மத்திய அரசு கையெழுத்திட்டது. இந்த நேரத்திலும் தமிழக அரசு சுற்றுச்சூழல் அனுமதி கொடுக்கமாட்டோம் என்று அறிவித்தது.


இந்த நிலையில் தான் கடந்த 16 ந் தேதி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதியும் மக்கள் கருத்துக் கேட்பும் தேவையில்லை என்று கூறப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு நெடுவாசல் உள்ளிட்ட டெல்டா விவசாயிகளை வேதனைப்படுத்தியுள்ளது.


இதனை அறிந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசின் அறிவிப்பால் விவசாயிகள், பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். அதனால் பழைய நடைமுறைகளையே பின்பற்ற வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


இந்த நிலையில் தான் நெடுவாசல் உள்ளிட்ட 100- க்கும் மேற்பட்ட கிராமங்களில் மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி கிராம சபை தீர்மானம் நிறைவேற்ற இளைஞர்கள் தயாராக உள்ளனர்.
 

இந்த நிலையில் மத்திய அரசின் புதிய அறிவிப்புகளை ரத்து செய்வதுடன் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டையில் போராட்டம் நடைபெற்றது.
 

ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் தமிழ்மாறன் தலைமை ஏற்றார். ஒன்றியச் செயலாளர் சொர்ணகுமார், திமுக நகரச் சயலாளர் சிவக்குமார், செரியலூர் இனாம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜியாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் மாதவன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தற்போது திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 

இதேபோல கல்லூரி மாணவர்கள் போராட்டங்களை நடத்த தயாராகி வருகின்றனர். மத்திய அரசின் அறிவிப்பால் தமிழ்நாடே போராட்டக் களமாக மாறி வருகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருநங்கையால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள்! அம்மன் கோயிலுக்கு தூக்கிச் சென்று வழிபட்ட பெண்கள்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது கல்லாலங்குடி கிராமம். இங்குள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரை மாதத்தில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் நடக்கும். இதில் கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி, சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திருவிழாக்களை கொண்டாடுவார்கள். மேலும் சுற்றியுள்ள பல கிராமமக்களும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி பெண்கள் இணைந்து சித்ரா பவுர்ணமி குழ அமைத்து முளைப்பாரி எடுக்கத் தொடங்கினர். விநாயகர் கோயிலில் இருந்து குறைவானவர்களே முளைப்பாரி தூக்கி வந்து வழிபட்டனர். இந்த நிலையில் தான் கம்மங்காடு உதயா உள்ளிட்ட சில திருநங்கைகள் வந்து கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு கிராம மக்கள் எல்லோரும் முளைப்பாரி தூக்க வேண்டும் என்று கூறியதுடன் சித்ரா பவுர்ணமி குழு பெண்களுடன் இணைந்து கடந்த ஆண்டு ஒரே மாதிரியான பாத்திரங்களில் விதைகளை தூவி 9 நாட்கள் விரதமிருந்து நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து பெண்களிடம் கொடுத்து ஊர்வலமாக தூக்கிச் சென்று அம்மனை வழிபட்டனர்.

அதே போல இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்த திருநங்கை உதயா பவுர்ணமி விழாக்குழு மூலம் முளைப்பாரி தூக்குவோரின் பெயர்களை முன்பதிவு செய்து, கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு சமுதாயக்கூடத்தில் வைத்து சுமார் 400 முளைப்பாரிகளை ஒரே மாதிரியான அலுமினிய பாத்திரத்தில் ஒரே மாதிரியான விதைகளை தூவி, விரதமிருந்து விதை தூவிய பாத்திரத்திற்கு காலை, மாலை என இரு நேரமும் தண்ணீர் தெளித்து, பவுர்ணமி குழுவினர் உதவியுடன் வளர்த்து வந்தார். அனைத்து பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக பயிர்கள் வளர்ந்திருந்தது.

செவ்வாய் கிழமை முளைப்பாரித் திருவிழாவிற்கு முன்பதிவு செய்த பெண்கள் ஒரே மாதிரியான சேலையில் வந்தனர். இந்த அழகைக்கான ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். வளர்ந்திருந்த முளைப்பாரிகளை அலங்கரித்து வைத்து ஒரு குடத்தில் அம்மன் சிலை வைத்து பூ அலங்காரம் செய்து வைத்திருந்த நிலையில் கோயில் பூசாரியிடம் அலங்காரத்தில் இருந்த அம்பாள் குடத்தையும் முளைப்பாரிகளை பெண்கள் தலையிலும் தூக்கி வைத்த உதயா அருளாட்டத்துடன் பூசணிக்காய் உடைக்க முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழக்கத்துடன் புறப்பட்ட ஊர்வலம் சுமார் 5 கி மீ தூரத்திற்கு பல பகுதிகளுக்கும் சென்று மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் வளாகம் வந்தடைந்தது.

women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

அனைத்து முளைப்பாரிகளும் கோயில் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன் கிழமை மாலை 4 மணிக்கு மீண்டும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து முளைப்பாரியை ஊர்வலமாக தூக்கிச் சென்று அருகில் உள்ள குளத்தில் விடுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் முளைப்பாரி திருவிழா என்றால் அவரவர் வீடுகளில் நமண்சட்டிகளில் அல்லது வெவ்வேறு பாத்திரங்களில் மண் நிரப்பி நவதானிய விதை தூவி பயிர் வளர்த்து திருவிழா நாளில் தூக்கி வந்து ஊரின் ஓரிடத்தி்ல் ஒன்று கூடி மண்ணடித்திடலைச் சுற்றி வந்து குளங்களில் விட்டுச் செல்வது வழக்கமாக இருக்கும்.

ஆனால் கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு திருநங்கை விரதமிருந்து ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து கிராம மக்களை அழைத்து தூக்கச் செய்து அம்மனை வழிபடச் செய்கிறார் என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முளைப்பாரியை சிறப்பாக செய்திருந்த திருநங்கை உதயாவிற்கு விழாக்குழு சார்பில் மரியாதை செய்தனர்.

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.