தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் அழைத்து சென்றதாகக் கூறப்படுகின்றது.
காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனும், ரகுகணேஷ் ஆகிய இருவரும் கூட்டாக சேர்ந்து, தந்தை மகன் இருவரையும் கடுமையாகத் தாக்கி ரத்தப் போக்கு ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கும் பதிவு செய்துள்ளனர். இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக ஜெயராஜ் மருத்துவ சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளித்துள்ளனர். இந்நிலையில், கோவில்பட்டி கிளை சிறையில் இருந்த மகன் பென்னிக்ஸ் நேற்றிரவு மர்மமான முறையில் உயிரிழக்க, அவரது தந்தையான ஜெயராஜ் அதிகாலையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
போலிசார் கடுமையாக அடித்ததால்தான் ரத்தப்போக்கு ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இருவரும் இறந்துள்ளனர் எனத் தகவல் வெளியாக இறந்தவர்களுக்கு நீதி கேட்டு காவல்துறையை கண்டித்து வியாபாரிகள் சங்கம் சார்பாக சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதிகளில் கடையடைப்பு செய்து வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கமளிக்க மாநில மனித உரிமை ஆணையம் தமிழக அரசின் முதன்மை செயலாளருக்கும், சிறைத்துறை ஏடிஜிபி-க்கும் சம்மன் அனுப்பியுள்ளது.